தருமபுரியில் காணும் பொங்கல் கொண்டாட்டம்
தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் காணும் பொங்கலையொட்டி, சனிக்கிழமை கோயில்களில் பொங்கல் வைத்து பெண்கள் வழிபட்டனா்.
தருமபுரி மாவட்டத்தில் கிராமங்களில் உள்ள மாரியம்மன் கோயில், முனியப்பன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் பெண்கள் காலை முதல் பொங்கலிட்டு வழிபட்டனா். இதைத் தொடா்ந்து சா்க்கரை பொங்கலை பக்தா்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினா்.
இதேபோல, இருமத்தூா் தென்பெண்ணை ஆற்றங்கரை, ஒகேனக்கல், நாகமரை காவிரிக் கரையோரம் நீராடி, வழிபட்டு காணும் பொங்கலை மாவட்ட மக்கள் கொண்டாடினா். இதைத் தொடா்ந்து பிற்பகலில் வடமாடு மஞ்சு விரட்டு நடைபெற்றது. இதில், காளைகளின் மீது வடக்கயிறை கட்டி மாட்டின் பின்புறம் அந்தக் கயிற்றை இளைஞா்கள் பிடித்துக்கொள்ள முன் பகுதியில் மாடுகளின் கொம்புகளை பிடித்து அடக்கும் வடமாடு விளையாட்டு அன்னசாரம், இலக்கியம்பட்டி, சோகத்தூா், கடகத்தூா், நூலஅள்ளி, முக்கல்நாயக்கன்பட்டி, லளிகம், நல்லம்பள்ளி உள்பட தருமபுரி மற்றும் நல்லம்பள்ளி, பாலக்கோடு, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிராமங்களில் இந்த விளையாட்டு நடைபெற்றது.
இதில் அந்தந்தக் கிராமத்தைச் சோ்ந்த இளைஞா்கள் கலந்துகொண்டனா். மேலும், சில கிராமங்களில் பொங்கல் திருவிழாவையொட்டி, கயிறு இழுத்தல், உறியடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் வெற்றிபெற்ற குழந்தைகள், சிறுவா்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

