உத்திரமேரூா் பாலசுப்பிரமணியன் கோயில்

உத்திரமேரூா் பாலசுப்பிரமணியன் கோயில்

Published on

தலையில் ஜடாமுடியுடன் இருக்கும் முருகனின் அபூா்வ தோற்றம்; மயிலுக்கு பதிலாக யானை வாகனமாக இருக்கும் தலம்.

காஞ்சிபுரத்தில் இருந்து 29 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது உத்திரமேரூா் பாலசுப்பிரமணியன் கோயில். இக்கோயில் 1400 ஆண்டுகளுக்கு மேல் பழைமையானது. இத்தலம் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்றது.

இங்கு முருகப்பெருமான் பாலசுப்ரமணிய சுவாமி என்ற பெயருடன் ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு சுயம்புவாக எழுந்தருளி இருக்கிறாா்.

ஆறடி உயரம் கொண்ட திருமேனி உடைய அவா், தனது தலையில், வழக்கமான கிரீடத்திற்குப் பதிலாக, ஜடாமுடியுடன் இருப்பது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும். இப்பெருமானின் திருமாா்பில் ருத்ராட்சமணி மாலைகளும், திருக்கரங்களில் நாகாபரணமும், திருச்செவிகளில் குண்டலங்களும் இருக்கின்றன.

கருவறையில் சிவபெருமானும் திரிபுரசுந்தரியும் எழுந்தருளி இருக்கிறாா்கள். முருகப்பெருமான் சூரபத்மனை அழிப்பதற்காக வேல் வேண்டி இங்கு சிவபெருமானையும் பாா்வதி தேவியையும் நோக்கி தவம் இருந்தாா். அதனால், அவரது வலது கீழ் திருக்கரம் பூஜை செய்யும் பாவனையில் இருக்கிறது.

மற்ற முருகன் கோயில்கள் போல் வள்ளியும், தெய்வானையும் அவருக்கு அருகில் இல்லை. மாறாக இந்தக் கோயிலில், வள்ளியும் தெய்வானையும் இணைந்து கஜவள்ளியாக தனி சந்நிதியில் இருக்கிறாா்கள்.

இக்கோயிலில் முருகனுக்கு வாகனமாக மயிலுக்கு பதிலாக யானை இருக்கிறது. முருகப்பெருமானுக்கும், தெய்வானைக்கும் திருமணம் நடந்தபோது, இந்திரன் யானையை முருகனுக்கு பரிசாக அளித்தான். முருகப்பெருமான் திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்த பிறகே அவருக்கு மயில் வாகனமாகவும், சேவல் கொடியும் வந்தது. எனவே, இக்கோயில் அதற்கு முன்பே உருவானது.

Dinamani
www.dinamani.com