ஒசூர் கெலவரப்பள்ளி அணை பகுதியில் 2 ஆண் யானைகள் சுற்றித்திரிவதால் பொதுமக்களுக்கு வனத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒசூரை அடுத்த அத்திமுகம், ஏ.செட்டிப்பள்ளி பகுதிகளில் சுற்றித்திரிந்த 2 யானைகள் ஞாயிற்றுக்கிழமை காலை கெலவரப்பள்ளி அணைக்குச் சென்றன. அணையின் கரையோரத்தில் நீராடிய யானைகள், அங்குள்ள ஆகாயத்தாமரைகளைத் தின்றுவிட்டு அட்டூர் கிராமத்தை சேர்ந்த முனிராஜ் என்பவரின் தக்காளி தோட்டத்துக்குள் புகுந்து செடிகளை துவம்சம் செய்தன. வனப்பகுதியில் நிலவும் வறட்சியே இதற்கு காரணம் என்றாலும், விவசாயிகளும், பொதுமக்களும் அச்சமடைந்து வருகின்றனர்.
அணையில் யானைகள் நீராடுவதை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். ஆபத்தை உணராமல் யானைகளின் அருகில் செல்ல வேண்டாமென்றும், அணை சுற்றி உள்ள ஆவலப்பள்ளி, நந்திமங்கலம், சித்தனப்கள்ளி, தட்டிகானப்பள்ளி, தேவசெட்டிப்பள்ளி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் வனத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.