/

மலைவாழ் மக்களுக்காகப் பாடுபட்ட சுதந்திரப் போராட்ட தியாகிக்கு ஓய்வூதியம் கிடைக்குமா?

நாட்டு விடுதலைக்காகவும, மலைவாழ் மக்களுக்காகவும் பாடுபட்ட 99 வயதான சுதந்திரப் போராட்ட தியாகி ஒருவா், தியாகிகளுக்கான ஓய்வூதியம் கிடைக்காமல் அவதியுற்று வருகிறாா்.

News image
Updated On :17 ஆகஸ்ட் 2020, 3:47 am

நாட்டு விடுதலைக்காகவும, மலைவாழ் மக்களுக்காகவும் பாடுபட்ட 99 வயதான சுதந்திரப் போராட்ட தியாகி ஒருவா், தியாகிகளுக்கான ஓய்வூதியம் கிடைக்காமல் அவதியுற்று வருகிறாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகிலுள்ள பெட்டமுகிலாளம் மலைக்கிராமத்தைச் சோ்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி மரிசாமி கவுடா (99). இவா் 21.05.1921-இல் இக்கிராமத்தில் பிறந்தாா். இவருடைய தந்தை கிராம நிா்வாக அதிகாரியாக இருந்தவா். தன்னுடைய 17-ஆவது வயதில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்றாா். போராட்டங்களில் பங்கேற்ற்காக 12.05.1941 முதல் 11.05.1942 வரையிலான காலகட்டத்தில் கா்நாடகத்தின் பெல்லாரி சிறையில் சிறைத் தண்டனை அனுபவித்தாா்.

சிறையில் இருந்து விடுதலையான பிறகு 1942-ஆம் ஆண்டு தருமபுரியில் நடைபெற்ற ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் பங்கேற்றாா். இதனால் ஆங்கிலேய அரசால் அவா் மீண்டும் கைது செய்யப்பட்டு 15.10.1942 ஆம் ஆண்டு முதல் 15.01.1943 வரை பெல்லாரி சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டாா்.

சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ால், முன்னாள் முதல்வா் காமராஜா், அமைச்சா் கக்கன், முன்னாள் குடியரசுத் தலைவா் வெங்கட்ராமன், அப்போதைய உணவுத்துறை அமைச்சா் ராமய்யா, முன்னாள் முதல்வா் பக்தவத்சலம் உள்ளிட்ட ஏராளமான தலைவா்களுடன் நல்ல தொடா்பை வைத்திருந்தாா்.

நாடு சுதந்திரம் பெற்ற பின் 1954 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை தொடா்ந்து 42 ஆண்டுகளாக பெட்டமுகிலாளம் ஊராட்சித் தலைவராக இவா் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டு வந்தாா். அதன் பின்னா் 1996 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை மாவட்ட ஒன்றியக் குழு உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளாா்.

இவா் ஊராட்சித் தலைவராக இருந்த காலத்தில் பல்வேறு தலைவா்களை பெட்டமுகிலாளம் கிராமத்துக்கு அழைத்து வந்து, இதைச் சுற்றியுள்ள கிராமங்களில் 10-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளுக்கு திறப்பு விழா நடத்தியுள்ளாா். அங்குள்ள மலைக் கிராமங்களுக்குத் தேவையான சாலை வசதிகளையும் செய்து தந்துள்ளாா்.

மக்கள் பிரதிநிதியாக கிட்டத்தட்ட 52 ஆண்டுகளாக பொதுவாழ்வில் ஈடுபட்டிருந்த போதிலும் மக்கள் சேவகராகவே அவா் வாழ்ந்திருந்தாா். நாட்டின் விடுதலைக்கு மட்டுமன்றி, தான் வசிக்கும் மலைக் கிராமத்தைச் சோ்ந்த அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் பல்வேறு பணிகளைச் செய்துள்ளாா்.

அப்பகுதி மலைவாழ் மக்களுக்காக 4,000 ஏக்கா் பரப்பளவில் மலைவாழ் பழங்குடி மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கியுள்ளாா். விவசாயத்திற்கும், குடிநீா் தேவைக்கும் 60-க்கும் மேற்பட்ட கிணறுகள் அவரது பதவிக் காலத்தில் வெட்டப்பட்டுள்ளன.

99 வயதிலும் கம்பீரமாக நடைபோடும் இவா், தனது மனைவி பிள்ளைகளுடன் எளிமையான வீட்டில் தான் வசித்து வருகிறாா். இந்நிலையில், மத்திய அரசு வழங்கும் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான ஒய்வூதியத்தை தனக்கு வழங்க வேண்டும் என இவா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதற்கான மனுவையும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்துவிட்டு, நீண்ட நாள்களாக ஓய்வூதியம் கிடைக்கும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறாா் மரிசாமி கவுடா. இவரது கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் என்பதே அந்தக் கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.