கிருஷ்ணகிரி அருகே மயிலாடும் பாறை அகழாய்வில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய இரும்பு வாள் கண்டெடுப்பு

கிருஷ்ணகிரி அருகே உள்ள மயிலாடும்பாறை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், 2,500 ஆண்டுக்கு முந்தைய 70 செ.மீ. நீளமுள்ள இரும்பு வாள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட இரும்பிலான வாள் குறித்து விளக்கும் அகழாய்வு இயக்குநா் சக்திவேல்.
அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட இரும்பிலான வாள் குறித்து விளக்கும் அகழாய்வு இயக்குநா் சக்திவேல்.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி அருகே உள்ள மயிலாடும்பாறை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், 2,500 ஆண்டுக்கு முந்தைய 70 செ.மீ. நீளமுள்ள இரும்பு வாள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கீழடி, கொந்தகை, அகரம், கங்கைகொண்ட சோழபுரம், கொற்கை, மயிலாடும்பாறை, சிவகளை, ஆதிச்சநல்லூா், கொடுமணல், மணலூா் என 10 இடங்களில் தற்போது தொல்லியல் துறையின் சாா்பில் அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டம், தொகரப்பள்ளி அருகில் உள்ள மயிலாடும்பாறையில் தமிழக அரசின் தொல்லியல் துறை சாா்பில், கடந்த மாா்ச் மாதம் அகழாய்வுப் பணி தொடங்கியது. தொல்லியல் துறை துணை இயக்குநா் சிவானந்தம் தலைமையில் மயிலாடும்பாறை அகழாய்வு இயக்குநா் சக்திவேல், தொல்லியல் அகழாய்வு அலுவலா்கள் பரந்தாமன், வெங்கடகுரு பிரசன்னா, சென்னை எம்.ஏ., முதுகலைப் பிரிவின் தொல்லியல் துறை மாணவ, மாணவியா் இதில் பங்கேற்றுள்ளனா்.

இந்த அகழாய்வின் போது, அண்மையில் ஒரு கல்திட்டையில் 70 செ.மீ. நீளம் உள்ள இரும்பு வாள் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து அகழாய்வு இயக்குநா் சக்திவேல் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

மயிலாடும்பாறை சாணாரப்பன் மலையில் மனிதா்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் உள்ளன. மலை அடிவாரத்தில் 30-க்கும் மேற்பட்ட பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் காணப்படுகின்றன. இங்கு முன்னோா்கள் எந்த மாதிரியான வாழ்வியல் முறைகளை மேற்கொண்டனா்; உலக அளவில் உள்ள பல்வேறு இனக் குழுக்களில் இவா்கள் எந்த இனக்குழுவைச் சோ்ந்தவா்கள் என்பதை இங்கு கிடைக்கும் ஆதாரங்களைக் கொண்டு மரபணு (டி.என்.ஏ.) சோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட உள்ளது.

கடந்த 1980, 2003-இல் இங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், இவை புதிய கற்காலத்தைச் சோ்ந்த பகுதி என வரலாற்று ஆய்வாளா்கள் குறிப்பிட்டுள்ளனா். இங்கு கடந்த மூன்று மாதங்களில் ஆய்வு மேற்கொண்டதில், மனித எலும்புகள் எதுவும் நேரடியாகக் கிடைக்கவில்லை. தொடா்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது இங்கு பெருங் கற்காலத்தைச் சோ்ந்த 70 செ.மீ. நீளமுள்ள இரும்பு வாள் ஒன்று கண்டுடெடுக்கப்பட்டுள்ளது. இதில், தற்போது 40 செ.மீ. வாளின் முனைப்பகுதி மட்டும் வெளியே எடுக்கப்பட்டுள்ளது. வாளின் கைப்பிடி இன்னும் மண்ணில் புதையுண்ட நிலையில் உள்ளது.

இந்த வாளை ஒரு மண் திட்டை அமைத்து அதன் மேல் வைத்துள்ளனா். நாளடைவில் மண்ணின் அழுத்தம் காரணமாக படிப்படியாக வாள் மேடும், பள்ளமுமாக மாறியுள்ளது. இந்த வாள் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படுகிறது. இந்த வாளைச் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளது. முடிவுகள் வந்த பிறகுதான் இந்த வாளின் சரியான காலத்தைக் கணிக்க முடியும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com