மத்தூர் அருகே விவசாய கிணற்றில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள பொம்மேப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் (22). இவர், பாண்டவர் குட்டை கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்ற சேட்டு என்பவரிடம் டிராக்டர் ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை டிராக்டரை ஓட்டிக்கொண்டு கிருஷ்ணாபுரம் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது, டிராக்டர் நிலைதடுமாறி காமாட்சி வள்ளி என்பவரின் 60 அடி ஆழ விவசாய கிணற்றில் கவிழ்ந்தது.
இதையும் படிக்க- திருவாரூர்: கமலாலயக் குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது
தகவலறிந்த பருகூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் மீட்புப் படையினர் நிகழ்வு இடத்திற்கு விரைந்து சென்று சங்கரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர் தேடுதலுக்கு பிறகு இன்று சங்கரை சடலமாக மீட்டனர்.
இந்த விபத்து குறித்து மத்தூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.