ஊத்தங்கரை: ஊத்தங்கரை காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பள்ளி பேருந்துக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் தனியார் பள்ளியின் பேருந்து செவ்வாய்கிழமை இரவு விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் காமராஜர் நகரை சேர்ந்த சதாம் உசேன்(33) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்திய பள்ளி வாகனத்தை காவல் நிலையத்தில் போலீசார் நிறுத்தி வைத்திருந்தனர்.
இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் மர்ம நபர்கள் பள்ளி பேருந்துக்கு தீ வைத்துள்ளனர். தகவல் அறிந்த போலீசார் ஊத்தங்கரை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரத்துக்கு மேல் போராடி தீயை அணைத்தனர். இதில் பள்ளி பேருந்து முழுவதுமாக எரிந்து சேதம் அடைந்தது.
தொடர்ந்து சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.