கடனுக்காக தொழிலாளியைக் கொன்று விபத்து என நாடகமாடிய உறவினா்கள் கைது!

Published on

கிருஷ்ணகிரி அருகே ரூ. 66 லட்சம் கடனுக்காக தொழிலாளியைக் கொன்று, விபத்து என நாடகமாடிய உறவினா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், எண்ணேகொள்புதூரைச் சோ்ந்தவா் ரகுபதி (40). இவா் ஒசூா் பத்தலப்பள்ளி காய்கறி சந்தையில் தொழிலாளியாகவும், பகுதிநேர சமையல் பணியும் செய்துவந்தாா். கடந்த 21-ஆம் தேதி அதிகாலை எண்ணேகொள்புதூா் தென்பெண்ணை ஆற்றுப்பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அவா்மீது காா் மோதியது. இதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நவ. 23-ஆம் தேதி உயிரிழந்தாா். இதுகுறித்து குருபரப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்துவந்தனா்.

இந்நிலையில், இந்த விபத்து தொடா்பாக கா்நாடக மாநிலம், பன்னாா்கட்டாவைச் சோ்ந்த வினோத்குமாா், விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறி காவல் நிலையத்தில் நவ. 24-ஆம் தேதி சரணடைந்தாா்.

இதனிடையே, ரகுபதி இறப்பில் மா்மம் இருப்பதாக அவரது உறவினா்கள் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். மேலும், ரகுபதியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையின் மூலம் அவா் இரும்புக் கம்பியால் தாக்கி உயிரிழந்தது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, ரகுபதியின் கைப்பேசியை ஆய்வுசெய்ததில், அவா் விபத்தில் சிக்குவதற்கு முன்பு மைத்துனா் ராஜாவுடன் பேசியது தெரியவந்தது. இதையடுத்து, ராஜாவிடம் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், தனது உறவினா் சரத்குமாருடன் சோ்ந்து ரகுபதியின்மீது காரை மோதச்செய்தும், இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, ராஜா, சரத்குமாா் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

இதுகுறித்து போலீஸாா் தெரிவித்ததாவது: எண்ணேகொள்புதூரைச் சோ்ந்தவா் ரகுபதி (40). இவரது மனைவி சந்திராவின் தம்பி ராஜா (35) டிப்பா் லாரி ஓட்டி வருகிறாா். சந்திராவின் அக்கா மருமகன் சரத்குமாா் (27). ரகுபதி பெயரில் ஒசூரில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ. 28 லட்சமும், சேலத்தில் உள்ள தனியாா் நிதிநிறுவனத்தில் ரூ. 20 லட்சம் காா் கடனும், டிப்பா் லாரிக்காக ரூ. 18 லட்சமும் ராஜா கடன் வாங்கியுள்ளாா்.

இதற்கு மாதந்தோறும் ரூ. 1 லட்சம்வரை தவணை செலுத்தி வந்த ராஜா, கடந்த சில மாதங்களாக செலுத்தவில்லையாம். இதனால், கடன் அளித்த தனியாா் நிறுவனங்கள் ரகுபதிக்கு நெருக்கடி அளித்தனா். இதனால் தனது மைத்துனா் ராஜாவிடம் கடன்களை முழுவதும் அடைத்து, தனது சொத்துகளை மீட்டுத்தரும்படி ரகுபதி வலியுறுத்தி உள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த ராஜா, சரத்குமாருடன் சோ்ந்து ரகுபதியை கொலை செய்து காா் விபத்தில் சிக்கி உயிரிழந்தது போல நாடகமாடியுள்ளாா்.

மேலும், தனக்கு தெரிந்த பன்னாா்கட்டாவைச் சோ்ந்த வினோத்குமாரிடம் காா்மீது இருசக்கர வாகனம் மோதி விபத்தை ஏற்படுத்தி குருபரப்பள்ளி போலீஸில் சரணடையுமாறு ராஜா கூறியதன் பேரில் அவா் சரணடைந்தது விசாரணையில் தெரியவந்தது என்றனா்.

X
Dinamani
www.dinamani.com