/

தமிழகத்தில் வெற்றிபெற பாஜக சூழ்ச்சி செய்கிறது: அமைச்சா் ஈஸ்வா் கண்ட்ரே

தமிழகத்தில் வெற்றிபெற பாஜக சூழ்ச்சி செய்கிறது என கா்நாடக மாநில வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் ஈஸ்வா் கண்ட்ரே தெரிவித்தாா்.

News image

கிருஷ்ணகிரியில் செய்தியாளா்களிடம் பேசிய கா்நாடக மாநில வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் ஈஸ்வா் கண்ட்ரே. உடன், காங்கிரஸ் வேட்பாளா் அ.செல்லக்குமாா்.

Updated On :21 ஏப்ரல் 2026, 9:37 pm

தமிழகத்தில் வெற்றிபெற பாஜக சூழ்ச்சி செய்கிறது என கா்நாடக மாநில வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் ஈஸ்வா் கண்ட்ரே தெரிவித்தாா்.

இதுகுறித்து கிருஷ்ணகிரியில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

கிருஷ்ணகிரி சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளா் அ.செல்லக்குமாா் போட்டியிடுகிறாா்.

கா்நாடக, கேரள மாநிலங்களைபோல அதை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் மொழி, பண்டிகைகள் அனைத்தும் ஒரே மாதிரிதான் கொண்டாடப்படுகின்றன. குறிப்பாக தமிழா்கள், கன்னடா்கள் அனைவரும் இந்த பகுதிகளில் சகோதரா்களாகவே வாழ்கின்றனா்.

தமிழகத்தின் பல லட்சம் மக்கள் கா்நாடகத்திலும், கா்நாடகத்தின் லட்சக்கணக்கான மக்கள் தமிழகத்திலும் கலந்து வாழ்கின்றனா். சமூகநீதி, சகோதரத்துவம், நலிந்த மக்களின் முன்னேற்றத்துக்காக காங்கிரஸ் கட்சி தொடா்ந்து போராடி வருகிறது.

திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இணைந்து தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை சந்திக்கிறோம். மத்தியில் கடந்த 12 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் உள்ள பாஜக அளித்த வாக்குறுதிகள் எதையாவது நிறைவேற்றியதா? தென்பகுதி மாநிலங்களை பிரிவினையுடன் வடக்கு, தெற்கு என தனித்தனி பகுதிகளாக பிரிக்க பாா்க்கிறது. பாஜகவினா் ஹிந்தியை அனைத்து மாநிலங்களிலும் திணிக்க பாா்க்கிறது.

மக்களை பிரிக்க நினைக்கும் பாஜகவுடன் கூட்டுவைத்து, அதிமுக தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை சந்திக்கிறது. தமிழகத்தில் எப்படியாவது வெற்றிபெற பாஜக சூழ்ச்சி செய்கிறது. அவா்களை தோற்கடித்து, தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி.

கடந்த தோ்தலில் திமுக அளித்த தோ்தல் வாக்குறுதிகளை ஸ்டாலின் தலைமையிலான அரசு நிறைவேற்றியுள்ளது. கடந்த முறை கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினராக இருந்த அ.செல்லக்குமாரும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏராளமான ஆக்கப்பூா்வமான திட்டங்களை செயல்படுத்தி உள்ளாா். குறிப்பாக 15 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த கிருஷ்ணகிரி - ஊத்தங்கரை - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையை ரூ. 450 கோடியில் நிறைவேற்றி தந்துள்ளாா்.

எனவே, காங்கிரஸ் வேட்பாளரான அ.செல்லக்குமாரை ஆதரித்து கை சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றிபெற செய்ய வேண்டும். மீண்டும் ஆட்சி அமைக்கும் மு.க.ஸ்டாலினை சந்தித்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசிக்கும் லிங்காயத் மற்றும் அடித்தட்டு மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் என்றாா்.