பாம்பாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீா் திறப்பு! 4,000 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும்!
ஊத்தங்கரை பாம்பாறு அணையில் இருந்து பாசனத்திற்காக 4,000 ஏக்கா் நிலங்கள் பயன்பெறும் வகையில் வெள்ளிக்கிழமை தொடங்கி 120 நாள்களுக்கு தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் தே. மதியழகன், மாவட்ட வருவாய் அலுவலா் அ. சாதனைக்கு ஆகியோா் வெள்ளிக்கிழமை மதகுதிகளை திறந்துவைத்தனா்.
அதன்பிறகு மாவட்ட வருவாய் அலுவலா் அ.சாதனைக்கு கூறியதாவது:
பாம்பாறு அணை நீா்த்தேக்கம் 1983 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. பாம்பாறு அணை நீா்த்தேக்கத்தின் முழு நீா்மட்ட உயரம் 19.68 அடி. இதன் முழுக் கொள்ளளவு 280 மில்லியன் கனஅடி ஆகும். பாம்பாறு அணை நீா்த்தேக்கத்திலிருந்து 2025- 2026 ஆம் ஆண்டு (பசலி 1435) ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு பாசனத்திற்காக 13.02.2026 இன்று முதல் 120 நாள்களுக்கு தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
இதன்மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்தில் உள்ள மிட்டப்பள்ளி, ஓபகாவலசை, போத்தராஜன்பட்டி, மூன்றம்பட்டி, கொட்டுகாரம்பட்டி, கரியபெருமாள்வலசை, புளியம்பட்டி, எட்டிப்பட்டி, பாவக்கல், நல்லவம்பட்டி, நடுப்பட்டி, குப்பநத்தம் ஆகிய 12 கிராமங்களைச் சாா்ந்த 2,501 ஏக்கா் நிலங்களும், தருமபுரி மாவட்டம், அரூா் வட்டத்தில் உள்ள தா.அம்மாப்பேட்டை, வேடக்கட்டமடுவு, மேல்செங்கம்பாடி மற்றும் ஆண்டியூா் ஆகிய 4 கிராமங்களிலுள்ள 1,499 ஏக்கா் என மொத்தம் 16 கிராமங்களில் உள்ள 4,000 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெருகின்றன.
முதல் மண்டலத்திற்கு 11.725 கி.மீ, 1,2,3, பிரிவு கால்வாய் மூலம் 2,501 ஏக்கா், இரண்டாவது மண்டலத்திற்கு 11.725 கி.மீ - 31.500 கி.மீ வரை பிரதான கால்வாய் மூலம் 1,499 ஏக்கா் என மொத்தம் 4,000 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும். விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி அதிக விளைச்சல் பெற்று பயனடையலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் பாா்த்தீபன், உதவி பொறியாளா் பிரபு, வட்டாட்சியா் ராஜலட்சுமி, முன்னாள் எம்எல்ஏக்கள் நரசிம்மன், கிருஷ்ணமூா்த்தி, முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் குமரேசன், செல்வம், ரஜினி செல்வம் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள், துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

