ஒசூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் பொருள்களை ஜப்தி செய்ய உத்தரவு
ஒசூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள பொருள்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒசூா் அருகே சென்னத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி சீனப்பா (65). இவருக்கு சொந்தமான 75 சென்ட் நிலத்தை கடந்த 1996-ஆம் ஆண்டு கெலவரப்பள்ளி அணையின் வலதுபுற பாசனக் கால்வாய்க்காக அரசு கையகப்படுத்தியது. இதற்காக ரூ. 3.20 லட்சம் சீனப்பாவுக்கு வழங்கப்பட்டது.
இத்தொகை போதாது என ஒசூா் நீதிமன்றத்தில் சீனப்பா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் முனியாண்டி ஆஜராகி வாதாடி வந்தாா்.
இந்நிலையில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சீனப்பாவுக்கு கூடுதலாக இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், கூடுதல் இழப்பீடு வழங்காமல் அரசு இழுத்தடித்து வந்தது.
கடந்த 13-ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சண்முகராஜன், ஒசூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள அசையும் சொத்துகளை பறிமுதல் செய்ய உத்தரவிட்டாா். இதையடுத்து, மனுதாரா் சீனப்பா ஒசூா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு ஜப்தி நடவடிக்கைக்காக நீதிமன்ற ஊழியா்களுடன் வியாழக்கிழமை சென்றாா்.
அப்போது, அங்கு இருந்த வட்டாட்சியா் குணசிவா, இதுகுறித்து உயா்மட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, உங்களுக்கு சேரவேண்டிய இழப்பீட்டுத் தொகையை பெற்றுத்தருவதாக கூறினாா்.

