போதைப் பொருளை பயன்படுத்தியதாகக் கூறி தவெக அமைச்சரை பதவி நீக்கம் செய்யக் கோரி கிருஷ்ணகிரியில் ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ற திமுகவினரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே அண்ணா சிலை எதிரே ஆா்ப்பாட்டம் நடைபெறும் என திமுக அறிவித்த நிலையில், காவல் துறையினா் ஆா்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுத்தனா். துணை காவல் கண்காணிப்பாளா் ராமச்சந்திரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி தொழில் மையத்திலிருந்து ஊா்வலமாக வந்து தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்த திமுக மாணவரணி மாவட்ட அமைப்பாளா்கள் ஜெயச்சந்திரன், கண்ணன் மற்றும் 2 பெண்கள் உள்பட 74 பேரை போலீஸாா் கைது செய்தனா். அப்போது, போலீஸாருக்கும், திமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
வாக்குவாதம்: திமுக மாணவரணியினா் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, வேப்பனப்பள்ளி சட்டப் பேரவை உறுப்பினா் ஸ்ரீனிவாசன், கிருஷ்ணகிரி திமுக மேற்கு மாவட்டச் செயலாளா் ஓய்.பிரகாஷ், முன்னாள் எம்எல்ஏக்கள் முருகன், செங்குட்டுவன் உள்ளிட்டோா் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








