தொலைந்துபோன வாழ்விடங்களால் விளைநிலங்களில் தஞ்சம் புகும் மயில்கள்: சரணாலயம் அமைக்கப்படுமா?

மலைப் பகுதிகளிலும், முள்புதர்களிலும் வாழ்ந்துவந்த மயில் இனங்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டதால்,
தொலைந்துபோன வாழ்விடங்களால் விளைநிலங்களில் தஞ்சம் புகும் மயில்கள்: சரணாலயம் அமைக்கப்படுமா?
Updated on
2 min read

மலைப் பகுதிகளிலும், முள்புதர்களிலும் வாழ்ந்துவந்த மயில் இனங்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டதால், உணவு தேடி விவசாய விளைநிலங்களுக்குள் வருவது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பயிர்களையும், மயில் இனத்தையும் பாதுகாக்க மாவட்டந்தோறும் மயில்கள் சரணாலயம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

 குளிர் தாக்கம் இல்லாத வெப்ப நிலையில் உள்ள சிறிய மலைக் குன்றுகளில் வாழ்ந்து வரும் மயில்கள், அங்குள்ள பழங்களை உண்டு வாழ்ந்து வந்தன. ஆனால், கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேல் போதுமான மழை இல்லாததால், குன்றுகளில் உள்ள எலந்தை, நாவல் உள்ளிட்ட பழ மரங்கள் காய்ந்துவிட்டன. மேலும், பசுமை இல்லாததால் குன்றுகளில் புழு, பூச்சிகளும் முற்றிலுமாக அழிந்துவிட்டன. இதனால், இரை தேடி சமவெளிக்கு வந்த மயில் இனம், விளைநிலங்களை இருப்பிடமாக்கி வாழ்ந்து வருகின்றன.

 காடுகளில் வாழ்வதற்குரிய உணவு கிடைக்காததால், விவசாய நிலங்களில் பயிரிடப்படும் நெற்பயிர், மக்காச் சோளம் உள்ளிட்ட பயிர்களை உள்கொள்கின்றன. சிறிது சிறிதாக காட்டை விட்டு விளைநிலங்களுக்கு வரத் துவங்கிய மயில்கள், தற்போது விளைநிலங்களையொட்டியுள்ள முள் புதர்களில் இனப்பெருக்கம் செய்து கூட்டமாக வாழத் தொடங்கியுள்ளன.
 மனிதர்கள் நடமாட்டத்தையோ, வாகனங்கள் சத்தத்தையோ கேட்டால் ஓடி ஒளிந்து கொண்ட மயில் இனங்கள், தற்போது மனிதர்களைக் கண்டு அச்சப்படுவதில்லை. காண்பதற்கே அரிதாகக் காணப்பட்ட மயில் இனம் தற்போது வளர்ப்புப் பிராணிகள் போல் மாறியுள்ளன.

 தேசியப் பறவையான மயில் இனம் பெருக்கம் அடைவதால், விவசாயிகள் என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்து வருகின்றனர். குறைதீர்க் கூட்டத்தில் விவசாயிகள் இதுகுறித்து கோரிக்கை வைத்தாலும், வனத் துறையினர் தீர்வு சொல்ல முடியாத நிலையில் உள்ளனர்.

 தமிழகத்தில் 20 லட்சம் மயில்கள்:

மயில்கள் பொதுவாக வறட்சி மிகுந்த பகுதியிலேயே வசிக்கின்றன. அப் பகுதியிலேயே அவற்றுக்கு மிகவும் பிடித்தமான பல்லி, தவளை, தானியங்கள் உள்ளிட்ட உணவுகள் கிடைக்கின்றன. வெப்பம் மிகுந்த வாழ்விடம், திறந்தவெளிக் காடுகள், புல்வெளிகளை மயில்கள் விரும்புகின்றன. இந்த நிலையில் இருந்த மலைக்குன்றுகள், கடந்த 10 ஆண்டுகளாக மழை இல்லாததால், தற்போது வெறும் பாறைகளாக மாறிவிட்டன.

 முறையான கணக்கெடுப்பு ஏதும் இல்லை என்றபோதிலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் மயில்கள் உள்ளன. தமிழகத்தில் மொத்தமாக 20 லட்சம் மயில்கள் உள்ளன என்றார் நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள மசக்காளிபட்டியைச் சேர்ந்த விவசாயி ஆர்.மெய்ஞானமூர்த்தி.

 இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தது, மயில்கள் விளைநிலங்களுக்குள் வரும் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண அரசு முன்வர வேண்டும். மயில்களால் விவசாய நிலங்கள் பாதிப்படைவதைத் தடுக்கவும், மயில்கள் வேட்டையாடப்படுவது, அதன் முட்டைகள் அழிக்கப்படுவது போன்ற செயல்களைத் தடுத்து, மயில் இனங்களைப் பாதுகாக்க மாவட்டந்தோறும் 1,000 ஏக்கருக்கு குறைவில்லாத வனச் சரிவுகளில், மயில்கள் சரணாலயம் அமைக்க வேண்டும் என்றார்.

 திட்டமிடப்பட்ட மயில்கள்  சரணாலயம்:

இந்தியாவில் கர்நாடகத்தில் பங்கபூர், ஆதிசுன்சுனகிரி ஆகிய இடங்களிலும், மகாராஷ்டிரத்தில் நெய்கானிலும் மயில்கள் சரணாலயங்கள் அமைந்துள்ளன. 1972-ஆம் ஆண்டு வனவிலங்குச் சட்டப்படி, இந்திய தேசியப் பறவையாக மயில் அறிவிக்கப்பட்டதால், அந்த பறவையினத்தைப் பாதுகாக்க அவற்றின் எண்ணிக்கை அதிகமுள்ள திருநெல்வேலி, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒன்றன்பின் ஒன்றாக மயில்கள் சரணாலயங்கள் அமைக்க வனத் துறை திட்டமிட்டுள்ளது.

 ஆனால், சரணாலயம் அமைக்க வனத் துறை திட்டமிட்ட காடுகளின் நடுவே தனியார் நிலங்கள் உள்ளதால், சரணாலயம் அமைப்பதில் சிக்கல் உள்ளது என்கின்றனர் வனத் துறையினர்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com