திருச்சபை பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருச்சபையைச் சேர்ந்தோர் தர்னா போராட்டம் நடத்தினர்.
நாமக்கல் - திருச்சி சாலை குப்பம்பாளையம், செக்கினா கிறிஸ்தவ திருச்சபையில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பாதிரியராகப் பணிபுரிந்து வருபவர் சாமுவேல் ஆரோன். இவர் திருச்சபைக்கு வரும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதாக புகார் எழுந்ததை அடுத்து, அவரை கடந்த மாதம் 9-ஆம் தேதி திருச்சபையை விட்டு வெளியேற்றினர். மேலும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நாமக்கல் நகர காவல் நிலையத்தில் திருச்சபையைச் சேர்ந்தோர் புகார் அளித்தனர்.
இந்த நிலையில், திருச்சபையைச் சேர்ந்தோர் ஞாயிற்றுக்கிழமை காலை வழக்கம்போல வழிபட வந்தபோது, மர்ம நபர்கள் சிலர் சபையின் கதவை பூட்டியிருந்தனர்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த திருச்சபையைச் சேர்ந்தோர் பூட்டியவர்கள் மற்றும் பாதிரியார் சாமுவேல் ஆரோன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சபையை பாதிரியாரிடம் இருந்து மீட்டுத் தர வேண்டும் என வலியுறுத்தி சபை முன் தர்னாவில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த நாமக்கல் போலீஸார் பாதிரியார் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து, தர்னா போராட்டத்தில் ஈடுபட்டோர் போராட்டத்தைக் கைவிட்டு, கலைந்து சென்றனர்.