மழைக் காலத்திலும் தண்ணீர் தேங்காத ஏரி, குளங்கள்: 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் அவலம்

நாமக்கல் மாவட்டத்தில் 1,000-க்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள் இருந்தும் நீர் வழித்தடங்கள் மாயமானதால் மழைக் காலத்திலும் வறண்டு
Updated on
2 min read


நாமக்கல் மாவட்டத்தில் 1,000-க்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள் இருந்தும் நீர் வழித்தடங்கள் மாயமானதால் மழைக் காலத்திலும் வறண்டு காணப்படுகின்றன.
10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் அவலத்தால், விவசாயம் கையறு நிலைக்குச் சென்றுவிட்ட நிலையில், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் விவசாயம் பிரதானத் தொழிலாக உள்ளது. காவிரி கரையோரப் பகுதிகளைத் தவிர குமாரபாளையம், திருச்செங்கோடு, நாமக்கல், பரமத்திவேலூர் வருவாய் வட்டங்களில் 25 சதவீதம் அளவுக்கு மட்டுமே காவிரி பாசனம் உள்ளது.
மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் முற்றிலும் கிணற்று பாசனமே நடைபெறுகிறது. நிலத்தடி நீர்மட்ட ஆதாரமாக, மழை நீரைச் சேமித்து, ஆண்டு முழுவதும் பயன்படுத்தும் வகையில், பெரிய அளவிலான குளங்கள் அமைந்துள்ளன.
மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் 72 ஏரிகள் உள்ளன. தவிர உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் 1,000-க்கும் மேற்பட்ட குளம், குட்டைகள் உள்ளன.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரும்பான்மையான குளங்கள் நிரம்பி, சுற்றுப்புற பகுதிகளில் ஆண்டு முழுவதும் விவசாயம் செழிப்பாகவும், வாழை, மஞ்சள், நிலக்கடலை, தானிய பயிர்கள், காய்கறிகள் உற்பத்தி மிகுந்த பகுதியாகவும் இருந்தது. இயற்கையாக அமைந்த பெரிய அளவிலான ஓடைகள் மூலம், குளங்கள் நீர்வரத்து பெற்றதும், பல குளங்கள் சங்கிலித்தொடர் அமைப்பில் அடுத்தடுத்து நிரம்புவது என சிறந்த கட்டமைப்புகளுடன் இருந்தது.
இயற்கையாகக் கிடைக்கும் மழை நீரைச் சேமிப்பதில் அலட்சியம் காரணமாக, குளம், குட்டைகள் ஆக்கிரமிப்பு, குளங்களுக்கு நீர்வரும், ஓடை, ஆறு உள்ளிட்ட நீர் வழித்தடங்கள் மாயமாகின.
பல இடங்களில் மறிக்கப்பட்டு, குடியிருப்புகள், விவசாய நிலங்கள் தொழிற்சாலையாக மாற்றப்பட்டுள்ளன. நீர் வழித்தடங்களை மீட்பது, குளம், குட்டைகளை பாதுகாப்பதில், பொதுப்பணித் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால், நீர் நிலைகள் வேகமாக அழிந்தும், மாயமாகியும் வருகின்றன.
இப்போது மழைக்காலம் என்றாலும்கூட குளம், குட்டைகளுக்கு நீர்வரத்து இல்லை. இதுவரை 10-க்கும் குறைவான ஏரிகளில்தான் பாதியளவுக்கு மட்டும் தண்ணீர் தேங்கி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் இதே நிலையே நீடித்து வருகிறது.
இதனால் மாவட்டத்தில் 75 சதவீதம் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் அபாயக் கட்டத்துக்குச் சென்று ஆபத்தான பகுதியாக மாறியுள்ளது.
குளங்கள் இருந்தும், நீர்வரத்து இல்லாமல் வறட்சியின் பிடியில் உள்ள பகுதிகளில், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த, அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ராசிபுரத்தைச் சேர்ந்த விவசாயி சரவணன் கூறியது:
நாமக்கல் மாவட்டத்தில் சராசரியாக ஆண்டுக்கு 700 முதல் 900 மி.மீ. வரை மழை கிடைக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டே ஏராளமான குளம், குட்டைகள் அமைக்கப்பட்டன.
கடந்த 15 ஆண்டுகளாக மழைப் பொழிவு இல்லாதது, பெய்யும் குறைந்த அளவு மழை நீரும் வரத்து வாய்க்கால்கள் சீரமைக்கப்படாததால் ஏரி, குளங்களுக்குச் சென்று சேருவதில்லை. ஏரி, குளங்கள் தொடர்ந்து வறண்டு கிடப்பதால் நிலத்தடி நீர்மட்டம் 1,500 அடிக்கு கீழ் சென்றுவிட்டது. இதனால் மாவட்டத்தில் 75 சதவீதம் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் அபாய கட்டத்தில் உள்ளது.
குளம், குட்டைகளுக்கான நீர்வரத்து வழித்தடங்களை மீட்டு, பெய்யும் மழை நீரை சேமிக்க வேண்டியது அவசியம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com