அரசு அறிவித்த ஆதார விலையை வழங்க மறுக்கும் தனியார் சர்க்கரை ஆலை மீது நடவடிக்கையெடுக்கக் கோரி விவசாயிகள் முழக்கம் எழுப்பியதால், குறைதீர்க் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகி நல்லா கவுண்டர், தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக தனியார் சர்க்கரை ஆலைகள் அரசு அறிவிக்கும் ஆதார விலையை வழங்குவதில்லை. 24 தனியார் சர்க்கரை ஆலைகள் சுமார் ரூ.1,433 கோடி அளவுக்கு விவசாயிகளுக்கு வழங்காமல் நிலுவை
வைத்துள்ளன.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் தனியார் சர்க்கரை ஆலை ரூ.65 கோடி அளவுக்கு விவசாயிகள் தர வேண்டிய பணத்தை வழங்காமல் நிலுவை வைத்துள்ளது. ஆலை நிர்வாகத்துடன் கடந்த 4 ஆண்டுகளாக பலமுறை பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், விவசாயிகளுக்குத் தர வேண்டிய டன்னுக்கு ரூ.1,200 நிலுவைத் தொகையில் ரூ.300 மட்டுமே தர முடியும் என்றும், இதனை விவசாயிகள் ஏற்றுக்கொண்டால், ஒரே தவணையில் வழங்குவதாகவும் கூறுகிறது.
இதனால் அரசு அறிவித்த விலையை வழங்க மறுக்கும், தனியார் சர்க்கரை ஆலை மீது வருவாய் மீட்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கையெடுக்க வேண்டும் என்றார்.
அப்போது திடீரென அவர், தனியார் சர்க்கரை ஆலை மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கையெடுக்க வேண்டும் என முழக்கம் எழுப்பினார். அவருக்கு ஆதரவாக விவசாயிகள் சிலரும் எழுந்து நின்று முழக்கம் எழுப்பினர். இதனால் கூட்ட அரங்கில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.