முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி ஆகியோர் குறித்து சமூக வலைதளங்கள் மூலம் அவதூறு பரப்பியதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகியை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே தேவம்பாளையத்தைச் சேர்ந்தவர் தினேஷ் (29). இவர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு திருச்செங்கோடு ஒன்றியச் செயலராக உள்ளார். இவர் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, அமைச்சர் பி.தங்கமணி ஆகியோர் குறித்து சமூகவலைதளங்களில் அவதூறு தகவல்களைப் பரப்பி வந்துள்ளார். இதுகுறித்து கலியனூர் அக்ரஹாரத்தைச் சேர்ந்த அதிமுக கிளைச் செயலர் குமரேசன் அளித்த புகாரின் பேரில், பள்ளிபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தினேஷைக் கைது செய்தனர்.