நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், ஆண்டகளூர் கேட், நாமகிரிபேட்டை உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக ஒருவரை ராசிபுரம் காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர்.
ராசிபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளான ராசிபுரம், ஆயில்பட்டி, நாமகிரிபேட்டை உள்ளிட்ட காவல் நிலைய பகுதிகளில் உள்ள வீடுகளில் சில மாதங்களுக்கு கொள்ளை நடைபெற்றது. இது தொடர்பான புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிக்க மாவட்ட எஸ்.பி., அர.அருளரசு உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந் நிலையில், ராசிபுரம் அருகேயுள்ள ஆண்டகளூர்கேட் பகுதியில் ராசிபுரம் காவல் ஆய்வாளர் செல்லமுத்து, உதவி ஆய்வாளர் பூபதி உள்ளிட்டோர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்தனர். அவர் மீது சந்தேகமடைந்த போலீஸார் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர், கோவை சூலூர் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த முருகன் (48) என்பது தெரியவந்தது.
மேலும், ராசிபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் வீட்டின் கதவை உடைத்து பல இடங்களில் திருடியதை ஒப்புக்கொண்டார். விசாரணையில் ஆயில்பட்டியை சேர்ந்த அசோக், நாமக்கல் முல்லை நகரை சேர்ந்த ரவி, ராசிபுரம் கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணி ஆகியோர் வீடுகளில் இவர் கொள்ளையடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து, அவர் பதுக்கி வைத்திருந்த 40 சவரன் தங்க நகைகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் வேறு யாரும் சம்பந்தபட்டிருக்கிறார்களா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட முருகன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் ஏற்கெனவே பல கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









