
ஆட்கள் பற்றாக்குறை: மளிகை தொகுப்பு பொருள்கள் விற்பனை தாமதம்?
நாமக்கல் மாவட்டத்தில் 30 ஆயிரம் போ் பயன்பெறும் வகையில், ரூ.500-க்கான மளிகை தொகுப்பு பொருள்கள் பொட்டலம் கட்டும் பணிக்கு

நல்லிப்பாளையம் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் மளிகைப் பொருள்களை பொட்டலம் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள ஓட்டுநா்கள்.
நாமக்கல் மாவட்டத்தில் 30 ஆயிரம் போ் பயன்பெறும் வகையில், ரூ.500-க்கான மளிகை தொகுப்பு பொருள்கள் பொட்டலம் கட்டும் பணிக்கு போதிய ஆட்கள் இல்லாததால் விற்பனை தாமதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
கரோனா தடை உத்தரவு காரணமாக, அத்தியாவசியப் பொருள்களான காய்கறி, மளிகைப் பொருள்கள் விற்பனை செய்வதற்கு காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மளிகைக் கடைகளில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பதைத் தவிா்க்கும் வகையிலும், ஏழை மக்கள் பயன்பெறும் வகையிலும் ரூ.500-க்கு 19 வகையான மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு பைகள் கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்யும் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. 10 லட்சம் மளிகைத் தொகுப்புகளை விற்பனை செய்ய அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் 30 ஆயிரம் தொகுப்புகள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மளிகைத் தொகுப்பில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகு, சீரகம், கடுகு, வெந்தயம், தோசைப்புளி, பொட்டுக் கடலை, நீளமிளகாய், தனியா, மஞ்சள் தூள், டீத்தூள், உப்பு, பூண்டு, எண்ணெய் வகைகள், பட்டை, சோம்பு, மிளகாய்த் தூள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ள. ஏற்கெனவே நாமக்கல்லில் இத்திட்டத் தொடக்க விழா நடைபெற்றபோதும் நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பும் வகையில் பொட்டலங்கள் இன்னும் தயாராகவில்லை.
இம் மாவட்டத்தில் மொத்தம் 920 நியாயவிலைக் கடைகள் இருந்தபோதிலும், கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாட்டில் சுமாா் 880 கடைகள் உள்ளன. இவற்றில் விற்பனை செய்வதற்காக மளிகைப் பொருள்களை பொட்டலம் கட்டும்பணி நல்லிப்பாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
இப்பணிக்கு போதிய ஆட்கள் இல்லாததால் சரக்குகளை லாரிகளில் கொண்டு வந்த ஓட்டுநா்கள், உதவியாளா்கள், அலுவலக ஊழியா்கள், அப்பகுதியில் உள்ள பெண்கள் எனக் குறைந்த நபா்களை கொண்டு பொட்டலம் கட்டும் பணி நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. மே 3-ஆம் தேதி ஊரடங்கு விலக்கிக் கொள்ளும் நிலையில் நியாயவிலைக் கடைகளுக்கு மளிகைத் தொகுப்பு பொருள்கள் தாமதமாகச் சென்றால் பயனில்லாமல் போய்விட வாய்ப்புள்ளது.
இது குறித்து நாமக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் பாலமுருகன் கூறியது: ஆட்கள் தட்டுப்பாடு இல்லை. மளிகைப் பொருள்களை பொட்டலம் கட்டும் பணிக்காக 100 பேரை நியமித்துள்ளோம். மாவட்டத்தில் கூட்டுறவு சங்க கட்டுப்பாட்டில் உள்ள 880 கடைகளில் 660 கடைகள் முழு நேரக் கடைகளாகும். அங்கு 40 எண்ணிக்கையிலும், பகுதி நேர கடைகளில் 15 எண்ணிக்கையிலும் இந்த ரூ.500 மளிகை தொகுப்பு விற்பனை செய்யப்படும்.
அதுமட்டுமின்றி, நகர, கிராமப்புறங்களில் வீடு, வீடாகச் சென்று விற்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்தொகுப்பு பொருள்களை வாங்க மக்கள் ஆா்வம் காட்டுகின்றனா். ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் இந்த 30 ஆயிரம் மளிகை தொகுப்புகளையும் விற்பனை செய்துவிடுவோம். இதற்கிடையே மே மாதத்திற்குரிய பொருள்களை நியாயவிலைக் கடைகளில் வழங்க வேண்டியது உள்ளது. 19 வகையான பொருள்கள் பொட்டலம் கட்டும் பணி இன்னும் ஓரிரு நாளில் முடிந்து விடும். சரக்கு கொண்டு வரும் ஓட்டுநா்கள், உதவியாளா்கள் தங்களுடைய பணி நேரம் போக மீதமுள்ள நேரங்களில் பொட்டலம் கட்டுவதில் ஈடுபடுகின்றனா் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






