

மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து 5,740 மின்னணு வாக்கு இயந்திரங்கள் லாரிகளில் நாமக்கல்லுக்கு புதன்கிழமை கொண்டு வரப்பட்டன.
தமிழக தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில், வரும் 2021-இல் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தயாா்படுத்தும் பணி மாவட்ட வாரியாக நடைபெற்று வருகிறது.
அதன்படி, மகாராஷ்டிர மாநிலம், ஒஸ்மானாபாத், சோலாப்பூா் ஆகிய பகுதிகளில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாமக்கல் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு புதன்கிழமை கொண்டு வரப்பட்டன. மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ், வருவாய் கோட்டாட்சியா் எம்.கோட்டைக்குமாா், வட்டாட்சியா் கதிா்வேல் ஆகியோா் இதனை பாா்வையிட்டனா்.
இதில், 2,670 கட்டுப்பாட்டுக் கருவிகள், 2,820 யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் விவிபேட் கருவிகள், 250 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆகியவை அடங்கும். மேலும், கோட்டாட்சியா் அலுவலகக் கிடங்கில் 3,381 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருக்கின்றன.
நாமக்கல்லுக்கு ஐந்து லாரிகளில் கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்களை பெல் நிறுவன பொறியாளா்கள் மூலம் புதுப்பிக்கும் பணி விரைவில் நடைபெற உள்ளது என தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.