கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் மருத்துவர், செவிலியர் மற்றும் காவலர் உடையணிந்து சிறுவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றால் 90 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்து விட்டார். 79 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். நாமக்கல், திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் 10 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாமக்கல்லில் கரோனா தொற்று கட்டுக்குள் இருந்தாலும் பொது மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாத நிலை உள்ளது.
முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் சாலைகளில் உலா வந்து கொண்டிருக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் அபராதமும் விதிக்கப்பட்டாலும் இன்னும் அலட்சிய நிலை தொடர்கிறது. இந்த நிலையில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தனியார் சிறப்பு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியரைக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
அந்த வகையில் நாமக்கல்- மோகனூர் சாலையில் உள்ள நியூ லைப் சிறப்பு பள்ளி மாணவர்கள் மருத்துவர், செவிலியர் மற்றும் காவலர் உடையணிந்து நாமக்கல் பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி மற்றும் தன்னார்வ அமைப்பினர் பங்கேற்றனர்.