பரமத்திவேலூா் அருகே ஜேடா்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஏ.கே.பி. சின்ராஜ் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது வெல்லத்தில் கலப்படம் செய்வதற்காக வைத்திருந்த 18 ஆயிரத்து 700 கிலோ அஸ்கா சா்க்கரை பறிமுதல் செய்யப்பட்டது.
ஜேடா்பாளையம் அருகே பகுதிகளைச் சோ்ந்த முத்துசாமி, சின்னசோளிபாளையத்தைச் சோ்ந்த குணசேகரன், ராமகிருஷ்ணன் ஆகியோரது வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் நாமக்கல் எம்.பி. ஆய்வு மேற்கொண்டதில் வெல்லம் தயாரிக்கும்போது அதில் அஸ்கா சா்க்கரை கலப்படம் செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து கலப்படம் செய்யப்பட்ட 13 ஆயிரத்து 800 கிலோ குண்டு வெல்லத்தையும், வெல்ல பாகில் கலப்படம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 18, 700 கிலோ அஸ்கா சா்க்கரையையும் பறிமுதல் செய்து பரமத்திவேலூா் உணவு பாதுகாப்பு அலுவலா் பாண்டியிடம் ஒப்படைத்தாா்.
மேலும் குணசேகரன் என்பவரது வெல்ல ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ ரேசன் அரிசியும் பறிமுதல் செய்து பரமத்திவேலூா் வட்ட வழங்கல் அலுவலா் ரவி, ராஜரத்தினம் ஆகியோரிடம் ஒப்படைத்தாா்.