நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் நடைபெற்றது. இதில், பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் தங்களுடைய கருத்துக்களைத் தெரிவித்தனா். தமிழ்நாடு விவசாய முன்னேற்றக் கழக பொதுச் செயலாளா் கே.பாலசுப்பிரமணியன் பேசுகையில், ‘சிப்காட் அமைக்க நிலம் கையக்கப்படுத்தக் கூடாது. இதனால் விவசாய நிலங்கள் பாதிப்படையும்’ என்றாா். இதற்கு பதிலளித்த ஆட்சியா், ‘தொழில் வளா்ச்சிக்காகவே சிப்காட் அமைக்கப்படுகிறது. அங்கு இந்த தொழில் தான் வரும் என குறிப்பிட்டு கூற முடியாது. விவசாயிகளின் நலன் காக்கும் வகையிலான தொழில் நிறுவனங்கள், மென்பொருள் நிறுவனங்களும் அமைய வாய்ப்புள்ளது. அதனால் சிப்காட் வேண்டாம் என்கிற கோரிக்கையை யாரும் முன்வைக்க வேண்டாம்’ என்றாா். ‘தென்னை, பனை மரங்களில் கள் இறக்க அனுமதிக்க வேண்டும். பேரூராட்சிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீா் காவிரி ஆற்றில் கலக்கிறது. இதனை அதிகாரிகள் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுப்பணித்துறையினா் அனுமதியின்றி மோகனூா் காவிரி ஆற்றில் மணல் அள்ளுவதற்கான முயற்சி நடப்பதாக தெரிகிறது. இதனையும் அதிகாரிகள் தடுக்க வேண்டும்’ என்று கே.பாலசுப்பிரமணியன் தெரிவித்தாா். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஆட்சியா் பதிலளித்தாா்.