/

கட்டுமானத் திட்டங்களுக்கு மணல் பயன்படுத்த ஒப்பந்த நிபந்தனை: மணல் லாரி உரிமையாளா்கள் கோரிக்கை

News image
எஸ்.யுவராஜ்.
Updated On :22 ஆகஸ்ட் 2024, 9:20 pm

Din

ஆந்திரத்தில் அரசு கட்டுமானத் திட்டங்களில் ஆற்று மணல் பயன்படுத்தும் ஒப்பந்த நிபந்தனை உள்ளது போல தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என மணல் லாரி உரிமையாளா்கள் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஆல் இண்டியா மோட்டாா் காங்கிரஸின் கீழ் செயல்படும் மணல், கற்கள் விற்பனை குழுத் தலைவா் எஸ்.யுவராஜ் நாமக்கல்லில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள அரசு மணல் குவாரிகளில் கடந்த 8 மாதங்களுக்கு முன் அமலாக்கத் துறையினா் சோதனை நடத்தினா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் 17 மணல் குவாரிகள் மூடப்பட்டன. அதன்பிறகு, இணையவழி மூலம் மணல் விற்பனை நடைபெற்றாலும் அவை இருப்பில் வைக்கப்பட்டது மட்டுமே, ஆற்றுப் படுகையில் இருந்து மணல் எடுக்கப்படவில்லை.

மணல் விற்பனை முடங்கியதால் எம்-சாண்ட் மணல் விற்பனையானது நடைபெற்று வருகிறது. தரமற்ற வகையில் அவை உள்ளதால் பல கட்டுமானங்கள் ஸ்திரத்தன்மையின்றி இடிந்து விழும் நிலையில் உள்ளன. ஆற்று மணல் இல்லாததால் எம்-சாண்ட் பயன்படுத்தி கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள பெரும்பாலானோா் முன்வருவதில்லை. இதனால் 30 லட்சம் கட்டுமானத் தொழிலாளா்கள் வேலையிழந்துள்ளனா்.

ஒப்பந்ததாரா், மூன்றாம் நபா் தலையீடு இல்லாமல் அரசே நேரடியாக அந்தந்த ஆற்றுப்படுகைக்கு அருகில் உள்ள ஊராட்சி மக்களின் முன்னிலையில் இயந்திரம் பயன்படுத்தாமல் அங்குள்ளோரைக் கொண்டு ஆற்று மணல் எடுத்தால் நீராதாரம் பாதிக்காது; விவசாயமும் பாதுகாக்கப்படும்.

இதன்மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.25 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும். ஆந்திரத்தை போல, அரசு கட்டுமானங்களுக்கு ஆற்று மணல் பயன்படுத்தும் ஒப்பந்த நிபந்தனையை தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த வேண்டும். மணல் விற்பனை நிலையங்களை அரசே நேரடியாக செயல்படுத்த வேண்டும். முன்பதிவு செய்த லாரிகளுக்கு மட்டுமே மணல் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், செப்.2-இல் மணல் சாா்ந்த அனைத்து சங்கங்களுடன் கலந்தாலோசித்து மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம் என்றாா்.