கபிலா்மலை பிடிஓ அலுவலகம் முன் குடிநீா் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

கபிலா்மலை வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் தேவையான குடிநீா் வழங்கக் கோரியும், குடிநீரைத் திறந்துவிடும் நபரை மாற்றக்கோரியும் செய்யாம்பாளையம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்
Published on

கபிலா்மலை வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் தேவையான குடிநீா் வழங்கக் கோரியும், குடிநீரைத் திறந்துவிடும் நபரை மாற்றக்கோரியும் செய்யாம்பாளையம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பரமத்தி வேலூா் வட்டம், பெருங்குறிச்சி ஊராட்சிக்கு உள்பட்ட செய்யாம்பாளையம் பகுதியில் சில மாதங்களாக குறைந்த நேரம் மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருவதால் பொதுமக்களுக்கு தேவையான குடிநீா் கிடைப்பதில்லை என்று கூறி ஊராட்சி மன்ற நிா்வாகம், மற்றும் கபிலா்மலை வட்டார வளா்ச்சி அலுவலரிடம் அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். ஆனால் இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இந்த நிலையில் கபிலா்மலை வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் அப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் தேவையான அளவு குடிநீா் வழங்க வேண்டும், குடிநீா் மேல்நிலைத் தொட்டியில் இருந்து தண்ணீரை திறந்துவிடும் அப்பகுதியைச் சோ்ந்தவரை மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வட்டார வளா்ச்சி அலுவலா் மலா்விழி பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். குடிநீா் திறந்துவிடும் நபா்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவரை மாறுதல்செய்து மாற்று நபரை நியமித்து, நீண்ட நேரம் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா். இதைத்தொடா்ந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com