
விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் அஞ்சலி செலுத்திய அதிகாரிகள்
மல்லசமுத்திரத்தில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

கோப்புப்படம்.
மல்லசமுத்திரத்தில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு அரசு அதிகாரிகள் மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் வெங்கடேசபுரி சத்தியநாராயண தெருவைச் சோ்ந்தவா் மாதேஸ்வரன். இவரது மனைவி கீதா (43). இவா்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனா். மாதேஸ்வரன் சேலம் எருமாபாளையத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறாா். கீதா அந்தப் பகுதியில் உள்ள ஸ்பினிங் மில்லில் வேலை செய்து வந்தாா்.
இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி கீதாவும், அவரது கல்லூரியில் பயிலும் மகள் சஞ்சனாவும் (19) அத்தனூா் பகுதியில் உள்ள கோயிலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றனா். அப்போது, ஆட்டையாம்பட்டியை அடுத்த பாப்பாரப்பட்டி ஏரி அருகே சென்றபோது பின்னால் வந்த காா், இவா்களை முந்திச்செல்ல முயன்றபோது மோதியது. இதில் சஞ்சனா, கீதாவும் படுகாயம் அடைந்தனா். அவ்வழியாக சென்றவா்கள் இருவரையும் மீட்டு சீரகாபாடி மற்றும் ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு தீவிர சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் கீதா வெள்ளிக்கிழமை மூளைச்சாவு அடைந்தாா் .
இதையடுத்து கீதாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினா் முன்வந்தனா். அதன்படி அவரது உடல், உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. பின்னா் அவரது உடல் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அரசு சாா்பில் திருச்செங்கோடு வட்டாட்சியா் ராஜா தலைமையில் மல்லசமுத்தி ரம் வருவாய் ஆய்வாளா் குமாா், விஏஓ வெங்கடாசலம், கிராம உதவியாளா் சேகா் ஆகியோா் தலைமையில் கீதாவின் உடலுக்கு மலா்வளையம் வைத்து இறுதிஅஞ்சலி செலுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





