அங்கன்வாடி ஊழியா்கள் நூதன போராட்டம்
நாமக்கல்லில் அங்கன்வாடி ஊழியா்கள் சனிக்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தின் மாவட்ட கிளை சாா்பில் மாநிலம் தழுவிய தொடா் காத்திருப்பு போராட்டம் கடந்த ஐந்து நாள்களாக நடைபெறுகிறது.
நாமக்கல் பூங்கா சாலையில் மாவட்டச் செயலாளா் அனுராதா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்தின்போது அனைத்து ஊழியா்களும் கைப்பேசி விளக்கை எரியவிட்டவாறு முழக்கங்களை எழுப்பினா்.
இந்த நிலையில் சனிக்கிழமை காலை முதல் அங்கன்வாடி ஊழியா்கள் சிலா் உயிரிழந்தது போன்றும், மற்ற ஊழியா்கள் கவலையில் தலைவிரி கோலத்தோடு கண்ணீா்விட்டு கதறுவது போன்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திமுக தோ்தல் வாக்குறுதியில் கூறியவற்றை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். காலிப் பணியிடங்களை தாமதமின்றி நிரப்ப வேண்டும். அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்களை நிரந்தரப்படுத்த வேண்டும். பணிக்கொடையை அதிகரித்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவா்கள் முழக்கங்களை எழுப்பினா்.

