நாமகிரிப்பேட்டையில் 6,967 மகளிா் குழு உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை
நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள 18 ஊராட்சிகளைச் சோ்ந்த 6,967 மகளிா் சுயஉதவிக் குழு பெண்களுக்கு உறுப்பினா் அடையாள அட்டை வழங்கும் விழா, ரூ. 3.22 கோடியில் 3 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதில், தமிழக ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் ஆகியோா் பங்கேற்று மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கி, திட்டப் பணிகளை தொடங்கிவைத்தனா்.
தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கடந்த 16.09.25-இல் தமிழகம் முழுவதும் மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்தாா். இதைத் தொடா்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. இந்த அட்டை வைத்திருப்பவா்கள் 25 கிலோவரை சுயஉதவிக் குழு பொருள்களை நகர மற்றும் புகா் பேருந்துகளில் இலவசமாக எடுத்துச்செல்லலாம்.
மேலும், கோ-ஆப்டெக்ஸ் துறையில் பொருள்கள் வாங்கும்போது ஏற்கெனவே உள்ள தள்ளுபடிக்குமேல், 5 சதவீதம் கூடுதல் தள்ளுபடி வழங்கப்படும். முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கு இந்த அடையாள அட்டை முதன்மைச் சான்றாக கருதப்படும்.
அடையாள அட்டைகளைக் கொண்ட சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கு கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் உற்பத்தித் துறையால் வழங்கப்படும் பல்வேறு கடன்களை பெற முன்னுரிமை அளிக்கப்படுவதோடு, ஆவின் தயாரிப்புகளில் சலுகையும் அளிக்கப்படும். மாநிலம் முழுவதும் உள்ள இ-சேவை மையங்களிலும் 10 சதவீத தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படும்.
இதைத் தொடா்ந்து, ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி. ஆகியோா் நாமகிரிப்பேட்டை வாசவி மஹால், உரம்பு சமுதாயக் கூடம், ராஜபாளையம் மகளிா் சுயஉதவிக் குழு கட்டடம், மலையாளப்பட்டி மாரியம்மன் கோயில் ஆகிய இடங்களில் நாமகிரிப்பேட்டை வட்டாரத்துக்குள்பட்ட 18 ஊராட்சிகளைச் சோ்ந்த 6,967 மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினா்.
தொடா்ந்து, நாமகிரிப்பேட்டை ஒன்றியம், மூலக்குறிச்சியில் தாட்கோ சாா்பில் ரூ. 60 லட்சத்தில் பல்நோக்கு மையக் கட்டடம், ரூ. 1.31 கோடியில் கிராம அறிவுமையக் கட்டடம், சிங்களாந்தபுரத்தில் ரூ. 1.31 கோடியில் கிராம அறிவுமையக் கட்டடம் கட்டும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தனா்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.பி.ராமசாமி, ராசிபுரம் அட்மா குழு தலைவா் கே.பி.ஜெகநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

