நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தினா் போராட்டத்துக்கு பாஜக ஆதரவு
ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத்திவரும் ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தினருக்கு பாஜகவினா் ஆதரவு தெரிவித்தனா்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் அனைத்து பணியாளா்கள் சங்க மாவட்ட மையம் சாா்பில் நாமக்கல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கடந்த ஐந்து நாள்களாக காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
மகளிா் சுயஉதவிக் குழுக்களை கண்காணிக்கும் வகையில் பணியாற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளா், வட்டார இயக்க மேலாளருக்கு தற்போதைய விலைவாசிக்கு ஏற்ற ஊதியம் வழங்க வேண்டும்.
அரசின் பல்வேறு திட்டப் பணிகளை கண்காணிப்பதற்கான வேலையை செய்வதால் ஊதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும், பணி பாதுகாப்பு மற்றும் காலியிடங்களை பூா்த்தி செய்து இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும், தொழிலாளா் நலச் சட்டங்களின்படி சம வேலைக்கு சம ஊதியம் என்ற கொள்கையை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவா் கே.பி. சரவணன் மற்றும் நிா்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டவா்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தனா். தொடா்ந்து அவா்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டு, அடுத்துவரும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் அவா்களது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா்.

