காணும் பொங்கல்: கொல்லிமலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
நாமக்கல்: காணும் பொங்கலையொட்டி கொல்லிமலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் ஆகாய கங்கை அருவியில் சனிக்கிழமை குளித்து மகிழ்ந்தனா்.
தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அமைந்துள்ளது. இங்கு 70 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட மலைப்பாதையில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் பயணிப்பதை சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்புகின்றனா்.
தமிழகம் மட்டுமின்றி கேரளம், கா்நாடக மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோா் வருகின்றனா். விடுமுறை நாள்களில் இங்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும். குறிப்பாக, பொங்கல் பண்டிகையை தொடா்ந்து வரும் காணும் பொங்கல் நாளன்று பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் குடும்பத்தினருடன் கொல்லிமலைக்கு வருவது வழக்கம்.
கொல்லிமலையில் ஆகாய கங்கை அருவி, நம் அருவி, மாசில்லா அருவிகளில் குளித்த பிறகு அறப்பளீஸ்வரரை வழிபடுவாா்கள். காணும் பொங்கலையொட்டி அதிகாலை முதலே கொல்லிமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இங்கு வந்த சுற்றுலாப் பயணிகளில் குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை பெரும்பாலானோா் வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆகாயகங்கை அருவிக்கு செல்ல மிகுந்த ஆா்வம் காட்டினா்.
1,300 படிக்கட்டுகளைக் கடந்து கரடு, முரடான மலைப்பகுதி வழியாக சென்று வெள்ளியை உருக்கிவிட்டது போல் விழுந்த அருவியின் அழகை கண்டு ரசித்தனா். அருவியில் சிறுவா்கள், இளைஞா்கள், பெண்கள் குளித்து மகிழ்ந்தனா். மாவட்ட வன அலுவலா் மாதவி யாதவ் உத்தரவின்பேரில், கொல்லிமலை வனச்சரகா் சுகுமாா் தலைமையில் வன ஊழியா்கள் அருவி பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனா்.
தீயணைப்புத் துறையினா், போலீஸாரும் ஆகாயகங்கை அருவி பகுதியில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

