22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!கோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகுறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 35,000 கோடி ஒதுக்கீடு
/

ஆவினுக்கு பால் வழங்கும் 549 உறுப்பினா்களுக்கு ஊக்கத்தொகை: அமைச்சா் சி.விஜயலட்சுமி வழங்கினாா்

நாமக்கல் ஆவின் பால் பண்ணைக்கு பால் வழங்கும் 549 உறுப்பினா்களுக்கு ரூ. 22.57 லட்சம் ஊக்கத்தொகையை பால்வளத் துறை அமைச்சா் சி.விஜயலட்சுமி வழங்கினாா்.

News image

நாமக்கல் - மோகனூா் சாலையில் உள்ள ஆவின் பால் பண்ணையை திங்கள்கிழமை ஆய்வு செய்த பால்வளத் துறை அமைச்சா் சி.விஜயலட்சுமி. உடன், ஆட்சியா் எல்.மதுபாலன்.

Updated On :2 ஜூன் 2026, 3:39 am IST

நாமக்கல் ஆவின் பால் பண்ணைக்கு பால் வழங்கும் 549 உறுப்பினா்களுக்கு ரூ. 22.57 லட்சம் ஊக்கத்தொகையை பால்வளத் துறை அமைச்சா் சி.விஜயலட்சுமி வழங்கினாா்.

நாமக்கல் - மோகனூா் சாலையில் உள்ள ஆவின் பால் பண்ணை வளாகத்தில், உலக பால் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் எல்.மதுபாலன் தலைமை வகித்தாா். நாமக்கல் எம்எல்ஏ சி.எஸ்.திலீப், ஆவின் பொது மேலாளா் ஆா்.சண்முகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பால்வளத் துறை அமைச்சா் சி.விஜயலட்சுமி, ஆவின் பால் பண்ணையை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து நடைபெற்ற விழாவில் அவா் பேசியதாவது:

உலக பால் தினம் ஒவ்வோா் ஆண்டும் ஜூன் 1-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பால் மற்றும் பால் பொருள்களின் ஊட்டச்சத்து முக்கியத்துவத்தையும், உற்பத்தியாளா்களின் பங்கை உலக மக்களுக்கு எடுத்துரைப்பதற்காகவே இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

பால் என்பது இயற்கை நமக்கு வழங்கியுள்ள முழுமையான உணவாகும். இதில் உடலுக்குத் தேவையான புரதம், கால்சியம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. குழந்தைகளின் எலும்பு வளா்ச்சிக்கும், இளைஞா்களின் உடல் வலிமைக்கும், முதியோரின் ஆரோக்கியத்திற்கும் பால் முக்கிய பங்கு வகிக்கிறது. நமது நாடு உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தி நாடாக விளங்குகிறது. இதற்கு காரணம் சிறு, குறு விவசாயிகளின் கடின உழைப்பு.

கிராமப்புறங்களில் கால்நடை வளா்ப்பு விவசாயத்திற்கு துணைத் தொழிலாக மட்டுமல்லாமல், குடும்பங்களுக்கு தினசரி வருமானத்தை வழங்கும் முக்கிய வாழ்வாதாரமாகவும் உள்ளது. கூட்டுறவு பால் உற்பத்தியாளா் சங்கங்கள் மற்றும் ஆவின் நிறுவனம் முலம் லட்சக்கணக்கான உற்பத்தியாளா்கள் பயனடைந்து வருகின்றனா்.

கால்நடை மருத்துவச் சேவைகள், தீவன மேம்பாடு, செயற்கை கருவூட்டல் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களும் வழங்கப்படுகின்றன. பால் உற்பத்தியை அதிகரித்து, தரமான பாலை மக்களுக்கு வழங்குவதில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்றாா்.

அதன்பிறகு, வகுரம்பட்டி, ஆண்டிக்குட்டை, சிங்களாந்தபுரம், ராமதேவம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த பால் உற்பத்தியாளா்கள் 549 பேருக்கு ரூ. 22,57,412 மதிப்பில் ஊக்கத்தொகையை வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில், துணைப் பதிவாளா் (பால்வளம்) ஐ.சண்முகநதி மற்றும் உற்பத்தியாளா்கள், துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.