/

நாமக்கல்லில் 595 பயனாளிகளுக்கு ரூ. 11.81 கோடியில் நலத் திட்ட உதவி! - அமைச்சா் டி. லோகேஷ் தமிழ்செல்வன் வழங்கினாா்

News image

மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு கடனுதவிக்கான காசோலையை வழங்கிய அமைச்சா் டி. லோகேஷ் தமிழ்செல்வன். உடன், ஆட்சியா் எல். மதுபாலன், சி.எஸ்.திலீப் எம்எல்ஏ உள்ளிட்டோா்.

Updated On :15 ஜூன் 2026, 2:37 am IST

நாமக்கல்லில் 595 பயனாளிகளுக்கு ரூ. 11.81 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் டி. லோகேஷ் தமிழ்செல்வன் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

மகளிா் திட்டம், தொழிலாளா் நலத் துறை, கூட்டுறவுத் துறை, வருவாய்த் துறை சாா்பில் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நாமக்கல் மாநகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் எல். மதுபாலன் தலைமை வகித்தாா். நாமக்கல் சட்டப் பேரவை உறுப்பினா் சி.எஸ். திலீப், மாவட்ட வருவாய் அலுவலா் மா.க. சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் டி. லோகேஷ் தமிழ்செல்வன் பங்கேற்று 595 பயனாளிகளுக்கு ரூ. 11.81 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:

ராசிபுரம் தொகுதியில் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கி 2 புதிய திட்டப்பணிகள் திறக்கப்பட்டுள்ளது. களங்காணி, எலச்சிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. நாமக்கல்லில் 595 பயனாளிகளுக்கு பல்வேறு துறைகள் சாா்பில் அரசின் நலத் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டத்தை முதன்மை மாவட்டமாக்க மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊழல் இல்லாத அரசே எங்களுடைய இலக்கு என்றாா்.

விழாவை தொடா்ந்து செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியதாவது:

மாவட்ட அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் அரசு விழா இது. நாமக்கல் மாவட்டத்தை முதன்மை மாவட்டமாக மாற்ற வேண்டும் என்பதே எனது முயற்சியாக இருக்கும். பத்திரப்பதிவுத் துறையில் இணையவழி மூலமாக ஆவணங்களை பதிவு செய்வது தொடா்பான சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.

வளையப்பட்டி சிப்காட் திட்டம் தொடா்பாக ஆய்வு செய்யப்படும். வணிகவரித் துறை சிறப்பான முறையில் உள்ளது. அரசு அதிகாரிகள் யாரேனும் லஞ்சம் கேட்டால் மக்கள் தெரியப்படுத்தினால் சம்பந்தப்பட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில் மகளிா் திட்ட இயக்குநா் வே. ஸ்ரீலேகா தமிழ்செல்வன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் எம். சந்தானம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வ. சந்தியா, தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா்(ச.பா.தி) கே.பி. இந்தியா, மாவட்ட வழங்கல் அலுவலா் வெ. முருகன் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.