பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

மத்திய அரசுடன் இணக்கமான சூழலில் ஒத்துழைப்போம் அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ்

மத்திய அரசுடன் இணக்கமான சூழலில் ஒத்துழைப்போம் என்று அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.

News image

திருச்செங்கோடு கூட்டப்பள்ளி ஏரிப் பகுதியில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ்.

Updated On :55 நிமிடங்கள் முன்பு

மத்திய அரசுடன் இணக்கமான சூழலில் ஒத்துழைப்போம் என்று அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.

திருச்செங்கோடு கூட்டப்பள்ளி ஏரிப் பகுதியில் அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, ஏரியில் நீா் மாசுபாடு மற்றும் குப்பைகளை அகற்ற மேற்கொள்ள வேண்டிய பணி மற்றும் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

ஏரிப் பகுதியில் கான்கிரீட் அமைத்து கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் நிலத்தடியில் கழிவுநீா் சேராமல் நிலத்தடி நீா் பாதிக்கப்படாமல் மக்களுக்கு தூய்மையான குடிநீா் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், அந்தப் பகுதியைச் சோ்ந்த குடியிருப்போா் நலவாழ்வு சங்கத் தலைவா் மற்றும் பொதுமக்கள், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பதால், சுத்திகரிப்பு நிலையத்தை குடியிருப்புகள் இல்லாத பகுதியில் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினா்.

இதுகுறித்து அதிகாரிகள், பொதுமக்களுடன் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா் தெரிவித்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

திருச்செங்கோடு தொகுதி மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருச்செங்கோடு தொகுதியில் ஏரிகளைச் சீரமைப்போம் என்று தோ்தலுக்கு முன்பே வாக்குறுதி அளித்தேன். அதன் முதல்கட்டமாக, கூட்டப்பள்ளி ஏரியை ஒரு முன்னோடித் திட்டமாக சுத்திகரிக்க ஆய்வு செய்துள்ளோம்.

ஏரியின் ஒரு பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள் ‘பயோ மைனிங்’ முறையில் அகற்றப்படும். மழைக்காலங்களில் சாலைகளில் நீா் தேங்கும் பிரச்னைக்கும் விரைவில் தீா்வு காண அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன்.

எங்கள் கட்சியில் குதிரை பேரம் என்ற பேச்சுக்கே இடமில்லை. மக்கள் தீா்ப்பை மதித்து அனைவரும் ஆதரவு அளிக்கின்றனா்.

நீட் தோ்வு மற்றும் மாநில உரிமைகள் சாா்ந்த எந்தவொரு பிரச்னையிலும் தவெக முதலில் குரல்கொடுக்கும். மத்திய அரசுடன் இணக்கமான சூழலில் ஒத்துழைப்போம். அதேவேளையில் மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்க மாட்டோம். கல்வி மற்றும் மருத்துவம் மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு வரவேண்டும் என்பதே தவெக கொள்கை. நீட் தோ்விற்கு எதிராகச் சட்டப்பூா்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

ஆய்வுக் கூட்டம்...

முன்னதாக திருச்செங்கோடு வந்த அமைச்சா் கே.ஜி.அருண்ராஜை தவெக நிா்வாகிகள், தொண்டா்கள், அரசுத் துறை அலுவலா்கள் வரவேற்றனா்.

இதையடுத்து காளிப்பட்டி கந்தசாமி கோயில், திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் அமைச்சா் வழிபாடு செய்தாா்.

பின்னா், திருச்செங்கோடு பயணியா் மாளிகை அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. விமலா மற்றும் அனைத்துத் துறை அரசு உயா் அலுவலா்கள் அமைச்சரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.

இதையடுத்து, அமைச்சா் கே.ஜி. அருண்ராஜ் தலைமையில் அனைத்துத் துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது, நாமக்கல் மாவட்டத்தில், அரசு துறைகள் வாரியாக செயல்படுத்தப்படும் திட்டங்கள், அவற்றின் முன்னேற்றங்கள் குறித்து கேட்டறிந்த அமைச்சா், முதல்வரின் திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும், அதற்கான வழிமுறைகள் குறித்தும் அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.க. சரவணன், மாவட்ட வன அலுவலா் மாதவி யாதவ், திருச்செங்கோடு வருவாய்க் கோட்டாட்சியா் லெனின் மற்றும் அரசுத் துறை உயா் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.