அதிமுகவில் இருந்தபோதும் எனது ரோல் மாடல் வீரபாண்டி ஆறுமுகம்தான்: டி.எம்.செல்வகணபதி பேச்சு

அதிமுகவில் இருந்தபோதும் மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தையே
Updated on
1 min read

அதிமுகவில் இருந்தபோதும் மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தையே முன்னுதாரணமாகக் கொண்டு செயல்பட்டதாக திமுக எம்.பி. டி.எம்.செல்வகணபதி கூறியுள்ளார்.

 சேலம் மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் டாக்டர் சூடாமணி தலைமை தாங்கினார். வீரபாண்டி ஆ.ராஜா முன்னிலை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், டி.எம்.செல்வகணபதி உள்ளிட்டோர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துப் பேசினர்.

 கூட்டத்தில் டி.எம்.செல்வகணபதி பேசும்போது, வீரபாண்டி ஆறுமுகம் கடந்த 45 ஆண்டுகளாக ஒரே கொள்கையுடன் திமுகவில் மாவட்டச் செயலர், சட்டப் பேரவை உறுப்பினர், அமைச்சர் என பல்வேறு நிலைகளில் பணியாற்றி கட்சிக்குப் பெருமை சேர்த்துள்ளார். பல்வேறு சோதனைகளைத் தாண்டி சேலத்தில் கட்சியை வழி நடத்திச் சென்றார். அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.

 நான் அதிமுகவில் இருந்தபோதும் வீரபாண்டி ஆறுமுகத்தைத்தான் எனது முன்னுதாரணமாகக் கொண்டு பணியாற்றி வந்தேன். அவர் மேலும் பல ஆண்டுகள் வாழ வேண்டியவர். ஆனால் போலீஸார் அவரை திட்டமிட்டு பழிவாங்கி விட்டனர். அவருக்கு பிறகு அனைவரும் ஒரே அணியில் ஒன்றாக இருந்து கட்சியை வழி நடத்த வேண்டும் என்றார் அவர்.

 கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் கட்சி அலுவலகத்தில் அவருக்கு வெண்கலச் சிலை அமைப்பதற்காக கட்சித் தலைவர் கருணாநிதி, பொதுச் செயலர் அன்பழகன், பொருளாளர் ஸ்டாலின் ஆகியோரிடம் அனுமதி பெறுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. வீரபாண்டி ஆறுமுகத்தின் மறைவுக்கு பிறகு நடைபெற்ற முதல் கூட்டம் என்பதால் ஏராளமான திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கட்சி அலுவலகத்தில் திரண்டிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com