அசாதாரண அரசியல் சூழலில் சேலத்தைத் தேடி வந்த முதல்வர் வாய்ப்பு

தமிழக அரசியல் வரலாற்றில் அசாதாரண சூழல் நிலவும் காலகட்டத்தில் திடீர் திருப்பமாக, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த எடப்பாடி கே.பழனிசாமிக்கு முதல்வர் வாய்ப்பு தேடி வந்துள்ளது.
Updated on
1 min read

தமிழக அரசியல் வரலாற்றில் அசாதாரண சூழல் நிலவும் காலகட்டத்தில் திடீர் திருப்பமாக, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த எடப்பாடி கே.பழனிசாமிக்கு முதல்வர் வாய்ப்பு தேடி வந்துள்ளது.

ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் முதல்வர்கள் டாக்டர் பி.சுப்பராயன், ராஜாஜி ஆகியோருக்கு அடுத்து எடப்பாடி கே.பழனிசாமி முதல்வர் ஆகியுள்ளார்.

தமிழக அரசியலில் நெருக்கடி மிகுந்த காலகட்டங்களில் சேலத்தைச் சேர்ந்தவர்கள் முதல்வராக வாய்ப்புப் பெற்று வருவது 1926 ஆம் ஆண்டு முதல் அரங்கேறி வருகிறது.

அந்தவகையில், ஒருங்கிணைந்த சேலம் மாவட்டம், நாமக்கல் குமாரமங்கலத்தைச் சேர்ந்த டாக்டர் பி.சுப்பராயன் 1926 தேர்தலில் சென்னை மாகாண முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1926 முதல் முதல் 1930 வரை பொறுப்பு வகித்தார்.

அந்தக் காலகட்டத்தில் சுயராஜ்ய கட்சிக்கும், நீதிக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், சுயேச்சையாக சென்னை மாகாண முதல்வராகப் பொறுப்பேற்கும் நிலை ஏற்பட்டது.

1937-இல் ராஜாஜி, சென்னை மாகாண முதல்வராகப் பொறுப்பு ஏற்கும் வாய்ப்பு மீண்டும் சேலத்துக்கு கிடைத்தது. 1940 வரை சென்னை மாகாண முதல்வராக இருந்த ராஜாஜி, ஆங்கிலேய அரசின் இரண்டாம் உலகப் போர் பிரகடனத்தைத் தொடர்ந்து அப் பதவியை ராஜிநாமா செய்தார்.

2 ஆவது முறை ராஜாஜி முதல்வர்: இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு இரண்டாவது முறையாக முதல்வராகும் வாய்ப்பை ராஜாஜி பெற்றார். 1952 தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்காத நேரத்தில், ஆட்சியைத் தக்கவைக்கும் முடிவில் காமராஜர் உள்ளிட்டோரின் முயற்சியால் ராஜாஜி மீண்டும் முதல்வராக்கப்பட்டார்.

1953 ஆம் ஆண்டு இறுதியில் தான் கொண்டு வந்த குலக் கல்வித் திட்டத்துக்கு எதிர்ப்புக் கிளம்பிய நிலையில், அவர் தனது பதவியை 1954-இல் ராஜிநாமா செய்தார்.

ராஜாஜியும், ராஜிநாமாவும்...: ராஜாஜியைப் பொருத்தவரையில் முதல்முறையாக சென்னை மாகாண முதல்வராக இருந்த போதும் அப் பதவியை ராஜிநாமா செய்திருந்தார். அதைத்தொடர்ந்து, சுதந்திர இந்தியாவில் மூன்றாவது தமிழக முதல்வராக இருந்த ராஜாஜி இரண்டாவது முறையும் தனது பதவியை ராஜிநாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

சேலத்தைத் தேடி வரும் முதல்வர் வாய்ப்பு: இந்த நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட அசாதாரண அரசியல் சூழலால் மீண்டும் சேலத்துக்கு முதல்வர் வாய்ப்புத் தேடி வந்துள்ளது.

அந்தவகையில், 1952 ஆம் ஆண்டுக்குப் பிறகு சுமார் 65 ஆண்டுகள் கழித்து சேலத்தை அடுத்த எடப்பாடி சிலுவம்பாளையத்தைச் சேர்ந்த எடப்பாடி கே.பழனிசாமி தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார்.

எடப்பாடி தொகுதியில் 1989, 1991 மற்றும் 2011, 2016 என நான்கு முறை வெற்றி பெற்றுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் 1998 இல் திருச்செங்கோடு தொகுதியில் நின்று வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com