ஜெயலலிதா இருந்திருந்தால் மிகப் பெரிய மோட்டார் தொழிற்சாலை ஆந்திராவுக்கு சென்றிருக்காது: ஓ.பன்னீர்செல்வம்
ஜெயலலிதா இருந்திருந்தால் மிகப் பெரிய மோட்டார் தொழிற்சாலை ஆந்திராவுக்கு சென்றிருக்காது ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்


ஜெயலலிதா இருந்திருந்தால் மிகப் பெரிய மோட்டார் தொழிற்சாலை ஆந்திராவுக்கு சென்றிருக்காது ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்
அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் எம்ஜிஆரின் 100 ஆவது பிறந்தநாள் விழா ஆலோசனைக் கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு ஓ.பன்னீர்செல்வம் பேசியது:
அதிமுக என்ற மாபெரும் இயக்கம் 1972-இல் உருவாக்கப்பட்டு, எம்.ஜி.ஆர். ஆட்சி செய்தார். எம்.ஜி.ஆர். மறைந்தபோது 17 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட அதிமுக ஜெயலலிதாவின் உழைப்பால் ஒன்றரை கோடி உறுப்பினர்களைக் கொண்ட இயக்கமாக உருவானது.
அதிமுக தொண்டர்களின் இயக்கமாகச் செயல்பட்டு வரும். அதிமுக தனிப்பட்ட குடும்பத்துக்குள் சென்றுவிடக் கூடாது என்று எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் பாடுபட்டனர். ஆனால், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு மாறிவிட்டது. அதை மீட்டெடுக்கும் தர்மயுத்தம் தொடர்ந்து நடைபெறும்.
ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத சூழல் உள்ளது.
உள்ளாட்சித் தேர்தலுக்கு முன் சட்டப்பேரவைத் தேர்தல் வரலாம் என்று காஞ்சிபுரத்தில் பேசியபோது, ஆட்சியில் உள்ளவர்கள் என்மீது கோபப்பட்டு வசை பாடினார்கள். எங்களால் ஆட்சியைக் கலைக்கும் சூழல் வராது.
தமிழகத்துக்கு வரவேண்டிய மிகப் பெரிய மோட்டார் தொழிற்சாலை ஆந்திரத்துக்கு சென்றுள்ளது. ஜெயலலிதா முதல்வராக இருந்திருந்தால், இது நடந்திருக்காது.
122 எம்எல்ஏ-க்கள், 48 மாவட்டச் செயலாளர்கள், 2017 பொதுக்குழு உறுப்பினர்கள் எங்கள் பக்கம்தான் உள்ளனர் என முதல்வர் பேசுகிறார்.
1972-இல் எம்.ஜி.ஆர். அதிமுகவைத் தொடங்கியபோது வேலப்பன் என்ற சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர்தான் அவருடன் வந்தார். ஆனால், 180 இடங்களுடன் கருணாநிதி ஆட்சியில் அமர்ந்தார். 1977-இல் ஆட்சிக்கு வந்த எம்ஜிஆர் தொடர்ந்து மூன்று முறை உயிரோடு இருக்கும் வரை முதல்வராக இருந்தார். அவர் ஆட்சியைப் பிடித்த பின்னர் கருணாநிதியால் ஆட்சிக்கு வர முடியவில்லை. தலைமைச் செயலகம் செயலற்று உள்ளது. இந்த நிலை மாற வேண்டும்.
சேலம் உருக்காலையை அரசே வாங்கும் சூழலை ஏற்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் பல பிரச்னைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. நான் முதல்வராக இருந்தபோது சுமார் 4,000 கையெழுத்துகளைப் போட்டுள்ளேன். கையெழுத்துப் போடுவது அன்றாட நிகழ்வுதான். அது சாதனை அல்ல.
நாங்கள் சசிகலாவின் குடும்பத்தை விட்டு வெளியே வாருங்கள் என்றுதான் கூறினோம். ஆனால், அவர்கள் தினகரனை வெளியேற்றியதாகக் கூறி நாடகமாடினார்கள். பின்னர், எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்கள்.
அதனால் தவறான பாதையில் சென்று கொண்டிருப்பவர்கள் லட்சியப் பாதையில் செல்லும் எங்கள் பக்கம் வர வேண்டும் என்றார்.
முன்னாள் அமைச்சர் எஸ்.செம்மலை பேசுகையில், ஆட்சியும், கட்சியும் எங்களிடம் உள்ளது என்கின்றனர். கட்சி தொண்டர்களுடையதாக இருக்க வேண்டும். ஆட்சி மக்களுடையதாக இருக்க வேண்டும் என்றார்.
கூட்டத்துக்கு, எஸ்.செம்மலை தலைமை வகித்தார். அவைத் தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, சி.பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், முன்னாள் பேரவைத் தலைவர் பி.எச்.பாண்டியன், கே.பி.முனுசாமி, விஜயலட்சுமி பழனிசாமி, மாஃபா பாண்டியராஜன், முன்னாள் எம்எல்ஏ-க்கள் எஸ்.கே.செல்வம், எஸ்.இ.வெங்கடாசலம், எம்.கே.செல்வராஜு, முன்னாள் மேயர் சுரேஷ்குமார், முன்னாள் துணை மேயர் மு.நடேசன், எம்.பி-க்கள் சத்யபாமா, பி.ஆர்.சுந்தரம், எம்.எல்.ஏ.க்கள் வி.சி.ஆறுக்குட்டி, ஓ.கே.சின்னராஜ், பி.ஆர்.ஜி. அருண்குமார் உள்ளிட்டபலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...