விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகை வழங்கப்படவில்லை: குறைதீர்க்கும் கூட்டத்தில் புகார்

விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகை வழங்கப்படவில்லை என குறை தீர்க்கும் கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
Updated on
1 min read

விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகை வழங்கப்படவில்லை என குறை தீர்க்கும் கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தலைமை வகித்தார். 
கூட்டத்தில் ஆத்தூர் பகுதி விவசாயிகள் பேசும்போது, கெங்கவல்லி பகுதியில் உள்ள வணிக வளாகம் பல ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. எனவே அந்த வணிக வளாகத்தை விவசாயிகளின் நெல், மற்றும் மக்காச்சோளம் விற்பனை செய்ய ஆவன செய்தால் விவாசாயிகள் நன்மை பெறுவார்கள். 
பனமரத்துப்பட்டியில் பழங்கள் விவசாயம் நல்ல முறையில் நடைபெறுகிறது. 
அதே போல அயோத்தியாப்பட்டணத்தில் பூக்களின் விவசாயம் நடைபெறுகிறது. நுகர்வோர் பயன்பாட்டுக்குப் போக மீதி உள்ளதை மாடுகளுக்கும், தரையிலும் கொட்டி வீணாக்கப்படுகிறது. 
இதைக் கருத்தில் கொண்டு பூக்களில் இருந்து வாசனை திரவியம் தயாரிக்கவும், பழங்களில் இருந்து சாறு தயாரிக்கவும்  தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும். 
இதைத்தொடர்ந்து விவசாய சொட்டு நீர் மானியக் கருவிகள் குறிப்பிட்ட 14 நிறுவனங்களில் மட்டுமே வாங்க வேண்டும் என்று நிர்பந்தம் செய்யப்படுகிறது. ஆனால் வெளிச்சந்தையைக் காட்டிலும் இந்த நிறுவனங்களின் விலை மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. 
எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தெரிவித்தனர். இதைக் கேட்ட  மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று  உறுதி அளித்தார்.
இந்த நிலையில் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி செந்தில் பேசியது:
பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு காப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இரண்டு ஆண்டுகாலமாகியும் இதுவரை எங்களுக்கு கருகிய பயிருக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை.
ஆனால் தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் போது தமிழக முதல்வர் தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயப் பயிர்களுக்கு பல ஆயிரம் கோடி நிவாரணம் வழங்கப்பட்டு விட்டதாக தவறான தகவலை அளித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேறபட்ட விவசாயிகளுக்கு இதுவரை நிவாரண தொகை வந்து சேரவில்லை. இதனால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
சேலம் கெங்கவல்லி பகுதி விவசாயி கூறும்போது, உராலிகவுண்டம் மயானத்தைப் பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் தனியார் ஒருவர் ஆக்கிரமித்துள்ளார். 
இது குறித்து பலமுறை பல்வேறு கூட்டங்களில் மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் தேவையை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com