வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மைதானம் அமைத்து பயிற்சி அளித்து விளையாட்டு வீரர்களை உருவாக்கி வரும் உமையாள்புரம் கிராமம்

விளையாட்டு மைதானம் அமைத்து, 30 ஆண்டுகளாக கிராமத்திலுள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளித்து, மாநில அளவில் சிறந்த விளையாட்டு வீரர்கள், காவலர்கள், உடற்கல்வி ஆசிரியர்களை

Updated On :14 மே 2018, 9:10 pm

விளையாட்டு மைதானம் அமைத்து, 30 ஆண்டுகளாக கிராமத்திலுள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளித்து, மாநில அளவில் சிறந்த விளையாட்டு வீரர்கள், காவலர்கள், உடற்கல்வி ஆசிரியர்களை உருவாக்கி, மற்ற கிராமங்களுக்கு உமையாள்புரம் கிராம மக்கள் முன் உதாரணமாக திகழ்ந்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உள்பட்டது உமையாள்புரம் கிராமம். 30 ஆண்டுகளுக்கு முன்பு அந்தக் கிராமத்தைச் சேர்ந்த விளையாட்டு மீது ஆர்வம் கொண்ட பள்ளிச் சிறுவனான பரமசிவம் மற்றும் அவரது நண்பர்கள் ஒன்றிணைந்து, இளஞ்சிட்டுக்கள் கைப்பந்து குழுவை, 1988 -இல் துவக்கினர். தொடர்ந்து இயங்கி வரும் அந்த கைப்பந்து குழுவின் முயற்சியால், கிராம மக்களின் ஒத்துழைப்போடு, அந்த கிராமத்தில் 50 சென்ட் நிலத்தில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டது.
அந்த மைதானத்திற்கு மாநில கூட்டுறவு வங்கித் தலைவர் இளங்கோவன் பரிந்துரையில் சுற்றுச்சுவர் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான உடை மாற்றவும், பொருள்கள் பாதுகாப்பு அறையும் அமைக்கப்பட்டது. ஆழ்துளைக் கிணறு அமைத்து தண்ணீர் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் வேறு எந்தக் கிராமத்திலும் இல்லாத வகையில், உமையாள்புரம் கிராமத்தில் அனைத்து வசதிகளுடன் தரமான விளையாட்டு மைதானம் இயங்கி வருகிறது. அந்த மைதானத்தில் கைப்பந்து விளையாட்டுக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அந்தக் கிராமத்தைச் சேர்ந்த விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு மைதானத்தில் விதிமுறைகளுக்கு உள்பட்டு முறையான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த விளையாட்டு மைதானம் அமைவதற்கு சிறுவயதிலேயே அடித்தளமிட்ட பரமசிவம், மாநில அளவில் சிறந்த கைப்பந்து வீரராக உருவானதோடு, உடற்கல்வித் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்று, தற்போது ஆத்துôரில் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.
அவரைப் போன்று, பரசுராமன், அப்புராஜ், கண்ணன், விஜயகுமார், வெங்கடாசலம் ஆகியோரும் சிறந்த விளையாட்டு வீரர்களாகவும், உடற்கல்வி ஆசிரியர்களாகவும் உருவாகியுள்ளனர். அதுமட்டுமின்றி, விளையாட்டு வீரர்கள் முன்னுரிமை அடிப்படையில், அந்தக் கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார், அசோக், ராஜ்குமார், அருள், மணி, செல்வராஜ் ஆகியோர் காவல் துறையில் பணிபுரியும் வாய்ப்பை பெற்றுள்ளனர். சந்தோஷ், வீரைய்யன், மணிகண்டன், வீரமணி, மோகன் ஆகியோர் பெரியார் பல்கலைக்கழக அணிக்கு தேர்வாகி மாநில அளவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இந்தக் கிராமத்து விளையாட்டு மைதானத்தில் முறையான பயிற்சி அளித்து, கிராம மக்களால் ஊக்கப்படுத்தப்பட்ட, அதே கிராமத்திலுள்ள அரசுப்பள்ளி 10-ஆம் வகுப்பு மாணவர் சந்தோஷ், 14 வயதுக்கு உள்பட்ட மாணவர் தமிழக கைப்பந்து அணியில் இடம் பிடித்தார். மிசோரம் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று, வெண்கலப் பதக்கம் பெற்று கிராமத்துக்கு மட்டுமின்றி மாநிலத்துக்கே பெருமைச் சேர்த்தது குறிப்பிடத்தக்கதாகும்.
1988 முதல் தொடர்ந்து 30 ஆண்டுகளாக ஆண்டுதோறும் மாநில அளவிலான கைப்பந்துப் போட்டிகளை நடத்தி, சேலம் மாவட்டம் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்களையும், வீராங்கனைகளையும் ஊக்குவித்து வருவதும் பாராட்டுக்குரியதாகும்.
விளையாட்டு மைதானம் அமைத்து, கிராமத்திலுள்ள மாணவர்களை ஊக்கப்படுத்தி, முறையான பயிற்சி அளித்து, சிறந்த விளையாட்டு வீரர்கள், காவலர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களை உருவாக்கி வரும், இளைஞர்களும், கிராம மக்களும், மற்ற கிராமங்களுக்கு முன் உதாரணமாக திகழ்கின்றனர் என்றால் அதுமிகையல்ல.
அதுகுறித்து, உமையாள்புரம் இளஞ்சிட்டு கைப்பந்து குழுவைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் பரமசிவம் கூறியதாவது:
எங்களது கிராமத்திலுள்ள பள்ளி சிறுவர்கள் ஒன்றிணைந்து 30 ஆண்டுகளுக்கு முன்பு இளஞ்சிட்டுகள் கைப்பந்து குழுவை துவக்கினோம். கிராம மக்களின் ஒத்துழைப்பால், சுற்றுச்சுவர், குடிநீர், உடை மாற்றும் அறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் மாவட்ட அளவில் சிறந்த கிராமப்புற விளையாட்டு மைதானம் உருவாகியுள்ளது.
விளையாட்டு மீது ஆர்வம் கொண்ட மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு முறையாகப் பயிற்சி அளித்து சிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாக்கி வருகிறோம். இந்த மைதானத்தில் பயிற்சி பெற்ற ஏராளமானோர், சிறந்த விளையாட்டு வீரர்களாக மட்டுமின்றி, காவல் துறையில் பணிபுரியும் வாய்ப்பை பெற்றுள்ளனர். சிறந்த உடற்கல்வி ஆசிரியர்களும் உருவாகியுள்ளனர்.
மதிப்பெண்களுக்காக மாணவர்களை கசக்கி பிளியும் காலக்கட்டத்தில், விளையாட்டு மீது ஆர்வத்தை ஏற்படுத்தி பயிற்சியும், ஊக்கமளித்து, சிறந்த வீரர்களை உருவாக்குவதில், மற்ற கிராமங்களுக்கு முன் உதாரணமாக திகழ்வது எங்களது கிராமத்திற்கு பெருமிதத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.