மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

மருத்துவமனை, திரையரங்குகள், துணிக்கடைகளில் பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை: ஆட்சியர் ஆய்வு

சேலம்  மாநகராட்சிப் பகுதியில்  தனியார் மருத்துவமனைகள்,  திரையரங்குகள்,  துணிக்கடைகளில்  மேற்கொள்ளப்பட்டு

Updated On :5 நவம்பர் 2018, 8:42 am IST

சேலம்  மாநகராட்சிப் பகுதியில்  தனியார் மருத்துவமனைகள்,  திரையரங்குகள்,  துணிக்கடைகளில்  மேற்கொள்ளப்பட்டு வரும்  பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக சேலம் மாநகராட்சி பகுதி மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி வளாகங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் உணவகங்கள்,  தங்கும் விடுதிகள், மருத்துவமனைகள், திரையரங்குகள்,  வணிக வளாகங்கள்,  பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் லைசால்,  பிளீச்சிங் பவுடர் கரைசலை கொண்டு தினந்தோறும் குறைந்தது 10 முறைகளாவது சுத்தப்படுத்த வேண்டும் என  மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள்  திரையரங்குகள் மற்றும் துணிக் கடைகளுக்கு அதிக அளவில் வருவதை முன்னிட்டு திரையரங்குகளில் ஒவ்வொரு காட்சிக்கு பிறகும் அனைத்து இருக்கைகளையும் சுத்தம் செய்வதோடு மட்டுமல்லாமல், கேன்டீன்  அமைந்துள்ள பகுதிகளில் தரைகளை தினந்தோறும் லைசால், பிளீச்சிங் பவுடர்  கரைசலை கொண்டு சுத்தப்படுத்திட வேண்டும். 
ஜவுளி நிறுவனம் மற்றும் திரையரங்குகளில் உள்ள மின்தூக்கிகள்,  நகரும் படிக்கட்டுகள் மற்றும் மாடிப் படிகளின் கைப்பிடிகளை தொடர்ச்சியாக சுத்தம் செய்ய வேண்டும். மருத்துவமனைகளில் நோயாளிகள் காத்திருக்கும் அறைகளில் கிருமி தொற்று நீக்க பணிகள் அரைமணி நேரத்துக்கு ஒருமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
தனிப்பிரிவு...
பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பாக பராமரிக்கவும், இந் நோய் பரவாமல் தடுப்தற்கு ஏதுவாக மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துமனைகளில் தனிப் பிரிவு உருவாக்கி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆட்சியர் ஆய்வு...
முன்னதாக,  கொண்டலாம்பட்டி மண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில்,  பன்றிக்காய்ச்சல்  தடுப்புப்  பணிகளை ஆய்வு  செய்த மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்தினர் மருத்துவமனை வளாகத்தை தூய்மையாக வைத்து கொள்வதோடு  மட்டுமல்லாமல்  அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள அறிவுரையின்படி பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வருவோர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சிகிச்சை பெற வருவோருக்கு தொற்று நோய் பரவாமல் தடுப்பதற்காக கைகழுவும் பழக்கத்தின் முக்கியத்துவத்தையும், கைகழுவும் முறைகள் தொடர்பான விவரங்களையும் விளக்கிட வேண்டும் என தெரிவித்தார்.
பின்னர் சூரமங்கலம் மண்டலத்தில் தனியார் துணிக்கடையில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் கடையின் நுழைவு வாயிலில் உள்ள கண்ணாடிகள்,  நகரும் படிக்கட்டுகள், துணிகள் வைக்கப்படும் மேசைகள் ஆகியவற்றை உரிய இடைவெளியில் சுத்தப்படுத்திடுமாறு சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் நிர்வாகிகளிடம் அறிவுறுத்தினார்.
பின்னர், சூரமங்கலம் மண்டலத்தில் உள்ள பல்லடுக்கு திரையரங்க வளாகத்தில் நுழைவுச் சீட்டு வழங்குமிடம் மற்றும் திரையரங்க வளாகத்தில் ஆய்வு செய்த  மாவட்ட ஆட்சியர் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பொது மக்கள் அதிக அளவில் வருகை தரும் பகுதி என்பதால் ஒவ்வொரு காட்சிக்கு பிறகும் அனைத்து இருக்கைகள் மற்றும் கைப்பிடிகளை  சுத்தம் செய்வதோடு மட்டுமல்லாமல் மாடிப் படிகளின் கைப்பிடிகள், நுழைவுச் சீட்டு வழங்குமிடம், கேன்டீன் ஆகிய பகுதிகளில் லைசால் மற்றும் பிளீச்சிங் பவுடர்  கரைசலை பயன்படுத்தி ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கு ஒருமுறை சுத்தப்படுத்திட வேண்டும் என அறிவுறுத்தினார். 
முன்னதாக தனியார் மருத்துவமனை, துணிக் கடை மற்றும் திரையரங்கில் பன்றிக் காய்ச்சல் தடுப்பு முறைகள் மற்றும் கைகழுவும் முறைகள் குறித்த ஒட்டுவில்லைகளை பொது மக்கள் தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக ஒட்டினார்.
இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் ரெ.சதீஷ், மாநகர் நல அலுவலர் மருத்துவர் கே.பார்த்திபன், சேலம் தெற்கு வட்டாட்சியர் டி.தீபசித்ரா, சுகாதார அலுவலர் எஸ் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் கே.பிரகாஷ், எ.கோபி, பி.ஆனந்த குமார் ஆகியோர உடனிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.