வரஞ்சரம் என்ற ஊரில் 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட லகுலீசர் சிற்பத்தை சேலம் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்தவர்கள் சனிக்கிழமை கண்டறிந்தனர்.
சேலம் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், ஆறகளூர் பொன்.வெங்கடேசன்,ஆசிரியர் சுகவனமுருகன்ஆகியோர் கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாக துருகம் வட்டத்தில் வரஞ்சரம் என்ற ஊரில் ஆய்வுகள் மேற்கொண்டனர். அப்போது அந்த ஊரில் உள்ள பசுபதீஸ்வரர் என்ற பழமையான சிவன் கோயிலில் 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட லகுலீசர் சிற்பத்தையும், கதிர் பிள்ளையார் சிற்பத்தையும் கண்டறிந்து ஆய்வுகள் மேற்கொண்டனர்.
சைவத்தின் ஒரு பிரிவான பாசுபதம் என்ற பிரிவானது சங்க காலம் முதற்கொண்டு தமிழகத்தில் இருந்ததாக அறியப்படுகிறது. பாசுபதமானது குஜராத் மாநிலம் காயாரோஹனம் என்னும் இடத்தில் லகுலீசர் என்பவரால் துவங்கப்பட்டு, அவரின் சீடர்கள் கெளசிகர், கார்கி ,கெளதமன் ஆகியோர் மூலம் இந்தியா முழுக்க பரவியது. தமிழகத்தில் 3 அல்லது 4 ஆம் நூற்றாண்டில் இந்த மதம் வேர் விடத் துவங்கியது. லகுலீசரின் சமயத் தத்துவங்கள் பாசுபத சைவம் என்ற பெயர் பெற்றது. இந்தப் பிரிவைப் பின்பற்றுபவர்கள் விபூதியில் குளிக்க வேண்டும்.
சாம்பலில் படுத்து உறங்க வேண்டும். சாம்பலில் நடனமாட வேண்டும். பரமன் அணிந்த மாலைகளை அணிந்து கொள்ள வேண்டும். குறிப்பிட்ட கோயில்களில்தான் தங்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் இருந்தன. கம்போடியா வரை இந்த மதம் பரவி இருந்தது. கி.பி.6ஆம் நூற்றாண்டில் துவங்கி 10ஆம் நூற்றாண்டு வரை பல்லவர், பாண்டியர் குடவறைகள் சோழர் கால தனிச் சிற்பங்களாக லகுலீசர் சிற்பங்கள் கிடைக்கின்றன. சிவனின் 28ஆவது அவதாரமாக லகுலீசர் அறியப்படுகிறார்.
தமிழகத்தில் இதுவரை 20-க்கும் மேற்பட்ட லகுலீசர் சிற்பங்கள்தான் கிடைத்துள்ளன. இதில் 10-க்கும் மேற்பட்ட சிற்பங்கள் ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் கிடைத்துள்ளன. அதில் புதிய வரவாக வரஞ்சரம் என்ற ஊரில் புதிய லகுலீசர் சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது.