மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.
கடந்த சில நாள்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்து வந்தது. கடந்த இரு நாள்களாக மேட்டூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருகிறது.
நேற்று காலை வினாடிக்கு 6,603கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 8,343கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 850கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவை விட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நேற்று காலை 96.55அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 96.64அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 60.57 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் சரிவில் இருந்து மீண்டு மீண்டும் உயரத் தொடங்கி உள்ளது.