தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சேலம் மாவட்டத்தில் 7 மாதங்களுக்குப் பின் கூடிய கால்நடைச் சந்தைகள்

சேலம் மாவட்டத்தில் 7 மாதங்களுக்குப் பிறகு, மாவட்டத்தில் மிகப்பெரிய கால்நடை சந்தைகளான பேளூர் ஆட்டுச்சந்தை, மின்னாம்பள்ளி மாட்டுச்சந்தை உள்ளிட்ட கால்நடை வாச்சந்தைகள் இன்று திங்கட்கிழமை கூடியது

News image
Updated On :5 அக்டோபர் 2020, 6:23 am

DIN

சேலம் மாவட்டத்தில் 7 மாதங்களுக்குப் பிறகு, மாவட்டத்தில் மிகப்பெரிய கால்நடை சந்தைகளான பேளூர் ஆட்டுச்சந்தை, மின்னாம்பள்ளி மாட்டுச்சந்தை உள்ளிட்ட கால்நடை வாச்சந்தைகள் இன்று திங்கட்கிழமை கூடியது. இதனால், கால்நடை வளர்க்கும் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி, பேளூர், அயோத்தியாபட்டணம், பெத்தநாயக்கன்பாளையம் பகுதி கிராம விவசாயிகள் மட்டுமின்றி, கல்வராயன் மலை, அருநுாற்றுமலை, நெய்யமலை, சந்துமலை, ஜம்பூத்துமலை ஆகிய மலை கிராமங்களிலும் பெரும்பாலானோர் விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டுள்ளனர். விவசாயிகள் மட்டுமின்றி, விவசாய கூலித் தொழிலாளர்களும், கணிசமான வருவாய் ஈட்டிக்கொடுக்கும் வெள்ளாடு, செம்மறியாடு, நாட்டுக்கோழி உள்ளிட்ட கால்நடைகள் வளர்ப்பை உபதொழிலாக செய்து வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் மிகப்பெரிய ஆட்டுச்சந்தைகளில் ஒன்றான வாழப்பாடி அடுத்த பேளூரில், 50 ஆண்டுக்கும் மேலாக திங்கட்கிழமை தோறும் ஆடுகள் விற்பனைக்கான பிரத்யோகமான வாரச்சந்தை கூடிவருகிறது. இதனால், மாவட்ட அளவில் ஆடுகள் வளர்ப்பு தொழிலில் வாழப்பாடி பகுதி கிராமங்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன.

பேளூர் சந்தைக்கு வாரந்தோறும் வெள்ளாடு, செம்மறியாடு உள்ளிட்ட பல்வேறு இன ஆடுகள் 500 முதல் 800 வரை விற்பனைக்கு, தீபாவளி, பொங்கல், ஆடி 18,  ரம்ஜான், பக்ரீத் போன்ற பண்டிகை காலங்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வருகின்றன. சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, வாழப்பாடியையொட்டி நாமக்கல், கள்ளக்குறிச்சி மற்றும் தர்மபுரி மாவட்ட எல்லையிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளும், வியாபாரிகளும், நுகர்வோர்களும்,பேளூர் வாரச்சந்தையில் வளர்ப்புக்காவும், இறைச்சிக்காவும் ஆடுகளை விற்பனையும், கொள்முதல் செய்து செல்கின்றனர். இதனால் வாரந்தோறும் ரூ. 30 முதல் ரூ.50 லட்சம் வரை வர்த்தகம் நடைபெற்று வந்தது. இந்நிலையில், கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமுல்படுத்தப்பட்டதால், வாரச்சந்தைகளும் மூடப்பட்டன. 

Story image

கடந்த 7 மாதங்களாக பேளூர் வாரச்சந்தையும் செயல்படாமல் முடங்கியதால், ஏறக்குறைய ரூ.20 கோடி அளவிற்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களில், விவசாயிகளும், விவசாய கூலித்தொழிலாளர்களும், பால் உற்பத்தியில் வருவாய் ஈட்டி கொடுக்கும் கறவை மாடுகளையும் விரும்பி வளர்த்து வருகின்றனர். கறவைமாடுகளுக்கு ‘உறைவிந்து’ செலுத்தி, குறைந்த பராமரிப்பு செலவில் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் அதிக பால் கறக்கும் உயர்ரக கலப்பின பசுக்களை, கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் தனியார் பால் பண்ணை நிறுவனங்களும் செயற்கை  கருவூட்டல் முறையில் உருவாக்கி கொடுத்ததாலும், சேலம் மாவட்டத்தில் கறவைமாடு வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தி பெரும் தொழிலாக உயர்ந்தது. வாழப்பாடி அடுத்த காரிப்பட்டி கருமாபுரம், அயோத்தியாப்பட்டணம் ராமலிங்கபுரம், முத்தம்பட்டி, ஏத்தாப்பூர் உள்ளிட்ட ஏராளமான இடங்களில் பெரிய அளவில் பிரபல தனியார் நிறுவனங்களில் பால் மற்றும் பால் பொருட்கள், ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. 

இங்கிருந்து நாடு முழுவதும் மதிப்புக்கூட்டப்பட்ட பால், நெய், வெண்ணை, ஐஸ்கிரீம், பால் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனால், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், அயோத்தியாப்பட்டணம், ஆத்துார், தலைவாசல், தம்மம்பட்டி, கெங்கவல்லி பகுதியில், குக்கிராமங்களிலும் அரசு பால் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் பால் பண்ணை நிறுவனங்களும் போட்டிப் போட்டுக் கொண்டு நேரடி பால் கொள்முதல் மற்றும் குளிரூட்டும் நிலையங்கள் அமைத்தன. கறவைமாடுகள் வளர்க்கும் விவசாயிகளுக்கு பால் உற்பத்தியால் கணிசமான வருவாய் கிடைத்து வருகிறது. கடந்த இரு மாதமாக சேலம் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், விளைநிலங்களும், தரிசு நிலங்கள் மற்றும் நீர்நிலைகளின் கரையோரங்களிலும், கால்நடைகளுக்கு பசுந்தீவனமாகும் தாவரங்கள் வளர்ந்து மேய்ச்சல் தரையாக மாறின. இதனால் பால் உற்பத்தி அதிகரித்துள்ளது. கறவை மாடுகளை வளர்ப்பதில் ஏராளமான விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் வாரந்தோறும் கூடும் பிரபல மாட்டுச்சந்தைகளில் ஒன்றான, வாழப்பாடி அடுத்த மின்னாம்பள்ளி மாட்டுச்சந்தை, கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பொது முடக்கம் நடைமுறையில் உள்ளதால் கடந்த 7 மாதங்களாக வர்த்தகமின்றி முடங்கி கிடக்கிறது. இதனால், கறவைமாடுகள் வாங்குவதற்கும், விற்பனை செய்வதற்கு வழியின்றி, விவசாயிகளும் வியாபாரிகளும் பரிதவித்து வந்தனர். கடந்த 7 மாதங்களில் ஏறக்குறைய ரூ.100 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, முடங்கிக் கிடக்கும் பேளூர் ஆட்டுச்சந்தை மற்றும் மின்னாம்பள்ளி மாட்டுச்சந்தையை திறந்து வர்த்தகம் செய்வதற்கு, வழிவகை செய்ய வேண்டுமென விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடம் கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து தினமணி நாளிதழில் படத்துடன் விரிவான செய்திகளும் வெளியானது. இந்நிலையில், நாடு முழுவதும் முடங்கிக் கிடக்கும் வாரச்சந்தைகளை திறந்து, சமூக இடைவெளியுடன் வர்த்தகம் செய்வதற்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளன. 

இதனையடுத்து,பேளூர் ஆட்டுச்சந்தை மின்னாம்பள்ளி மாட்டுச்சந்தை ஆகியவை, 7 மாதங்களுக்குப் பிறகு இன்று திங்கட்கிழமை காலை திறக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான விவசாயிகளும், வியாபாரிகளும், தங்களது ஆடுகள், கறவைமாடுகள்,காளைகள் உள்ளிட்ட கால்நடைகளை பேளூர் மற்றும் மின்னாம்பள்ளி கால்நடை சந்தைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதிலும்,  வாங்குவதில் ஆர்வம் காட்டினர். 7 மாதங்களுக்குப் பிறகு கால்நடைச் சந்தைகள் சூடு பிடித்துள்ளதால், சேலம் மாவட்டத்தில், எதிர்வரும் மாதங்களில் ஆடுகள், கறவைமாடுகள் உள்ளிட்ட கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தி தொழில் மேம்படுமனெ, விவசாயிகளும், வியாபாரிகளும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.