தம்மம்பட்டியில், ரூ.50 லட்சம் மதிப்புள்ள பான்பராக், குட்காவை பதுக்கிய வழக்கில் கைதான பா.ஜ.க. பிரமுகர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.
சேலம் எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் உத்தரவின் பேரில், எஸ்.ஐ. ராஜ்மோகன் தலைமையிலான சிறப்பு தனிப்படை போலீசார், கடந்த ஜூலை 23 ஆம் தேதி இரவு, தம்மம்பட்டி நடுவீதியில், பாஜக நகர வர்த்தக அணி செயலாளரான பிரகாஷ் என்பவருடைய கடை மற்றும் குடோன்களில் அதிரடிச் சோதனை நடத்தினர்.
அப்போது, உடையார்பாளையம் இடுகாடு செல்லும் வழியில் தொடக்கப்பள்ளி எதிரே உள்ள நாயக்கர் தோட்டத்தில், பிரகாஷ் பதுக்கி வைத்திருந்த, 50 லட்ச ரூபாய் மதிப்பிலான, ஒன்றரை டன் எடையுள்ள குட்கா, பான்பராக் பாக்கெட்களை, தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள பா.ஜ.க. பிரமுகர் பிரகாஷ் தற்போது சேலம் மத்திய சிறையில் உள்ள நிலையில், அவர் மீது குண்டாஸ் வழக்கு பதியக்கோரி, ஆட்சியர் கார்மேகத்திற்கு, சேலம் எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் பரிந்துரைத்தார்.
அதனையடுத்து, தம்மம்பட்டி பா.ஜ.க. பிரமுகர் பிரகாஷ் மீது, குண்டாஸ் வழக்குப் பதிய ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டார்.