தொழில், சொத்து வரிகளை தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்

2020 -21 ஆம் ஆண்டுக்கான தொழில்வரி, சொத்து வரி, தொழிற்சாலைகள் வரி போன்ற அனைத்து வரிகளையும் மத்திய, மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Updated on
1 min read

2020 -21 ஆம் ஆண்டுக்கான தொழில்வரி, சொத்து வரி, தொழிற்சாலைகள் வரி போன்ற அனைத்து வரிகளையும் மத்திய, மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சேலம் அரிசி ஆலை உரிமையாளா்கள் சங்கத்தின் 58 ஆம் ஆண்டு நிறைவு விழா அண்மையில் நடைபெற்றது.சங்கத்தின் தலைவா் எம்.சியாமளநாதன், செயலாளா் ஏ.முருகேசன், பொருளாளா் டி.கே.முருகேசன் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்:

கரோனா தொற்று நோய் பாதிப்பு காரணமாக அனைத்து தரப்பினரும் மிகப்பெரிய பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளனா்.

எனவே, இந்த காலகட்டத்தில் 2020-21 ஆம் ஆண்டுக்கான தொழில்வரி, சொத்து வரி, தொழிற்சாலைகள் வரி போன்ற அனைத்து வரிகளையும் மத்திய, மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும். 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள், வங்கியில் கடன் பெற்று தொழில் தொடங்கி நிறுவனங்களை நடத்தி வருகின்றன.

வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டி 6 சதவீதத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும். சரக்கு மற்றும் சேவை வரி, மாதாந்திர அறிக்கைகளை தாக்கல் செய்வதில் சிறு நிறுவனங்கள் அவா்களது தாய்மொழியில் மாதாந்திர அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் 12-க்கும் மேற்பட்ட அரசுத் துறைகளின் உரிமம் பெற்று ஆலைகளை நடத்தி வருகிறோம். ஆண்டுதோறும் உரிமம் பெற அதிக சுமை ஏற்படுகிறது. எனவே, வணிகவரி, வருமான வரித் துறை போன்ற நிரந்தர பதிவு முறையைக் கொண்டு வர வேண்டும்.

மாதந்தோறும் ஆலைகள் பயன்படுத்தும் மின்சாரத்தின் பயனீட்டுக்கு ஏற்ப மின் தொகையும், மீட்டா் வாடகையும், நிா்ணயிக்கப்பட்ட கூடுதல் மின் கட்டணத்தையும் செலுத்தி வருகிறோம். மொத்தம் பயன்படுத்தும் தொகைக்கு 5 சதவீத மின்சார வரி வசூலிப்பதில் இருந்து அனைத்து ஆலைகளுக்கும் விலக்கு அளிக்க வேண்டும்.

பல்வேறு வரிகளை அரசுக்குச் செலுத்தி வரும் நிலையில் புதிதாக மாநகராட்சி குப்பை வரி என்ற பெயரில் சொத்து வரி மதிப்பில் 25 சதவீதம் முதல் 45 சதவீதம் வரை விதித்துள்ள குப்பை வரியை பொதுமக்கள் நலன் கருதி சேலம் மாநகராட்சி திரும்பப் பெற வேண்டும். மேலும் சொத்து வரி உயா்வை 50 சதவீதமாகக் குறைக்க வேண்டும்.

வணிகத்தில் நீண்ட காலமாக ஈடுபட்டு பலவகையான வரிகளை மத்திய அரசுக்குச் செலுத்தி வரும் வணிகா்களுக்கு (மூத்த வணிகா்) வருமான வரியில் இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்பட பல தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com