

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வந்ததையடுத்து சேலத்தில் இரு மாதங்களுக்கு பிறகு மீண்டும் பேருந்துச் சேவை தொடங்கியது.
தமிழகத்தில் கரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக பொது முடக்கம் அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில் சேலம், நாமக்கல் உள்ளிட்ட நோய் பாதிப்பு அதிகம் காணப்பட்ட 11 மாவட்டங்களை தவிர்த்து இதர மாவட்டங்களில் கடந்த 2 வாரமாக பேருந்துச் சேவை செயல்பட்டது. இந்தநிலையில், தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டதை அடுத்து, சேலம் மாவட்டத்தில் இரண்டு மாதங்களுக்கு பிறகு திங்கள்கிழமை மீண்டும் பேருந்துச் சேவை தொடங்கியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1,047 பேருந்துகளில் 65 சதவீத பேருந்துகள் மட்டும் தற்போது இயக்கப்படுகின்றன. இதில் 302 நகர பேருந்துகள், 406 புறநகர் பேருந்துகள் 50 சதவீத பயணிகளுடன் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கரோனா தொற்றுப் பரவல் கட்டுக்குள் வந்துள்ளதை அடுத்து, கோயில்களில் சாமி தரிசனம் மேற்கொள்ள பக்தர்களுக்கு திங்கள்கிழமை முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘சேலம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தின் அறிவுரைகள் அடிப்படையில், சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும் திங்கள்கிழமை முதல் அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, சமூக இடைவெளியுடனும், உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடனும் பக்தர்கள் வழக்கமான சாமி தரிசனத்துக்கு மட்டும் அனுமதிக்கப்படுவர். மாதந்திர பிரதோஷம், அமாவாசை, பெளர்ணமி, தேய்பிறை அஷ்டமி உள்ளிட்ட எந்த சிறப்பு வழிபாடுகளிலும் பக்தர்களுக்கு தற்போதைய நிலையில் அனுமதி இல்லை’ என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.