சேலத்தில் வாகனச் சோதனையில் 4 கிலோ வெள்ளிக் கொலுசு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கம்பிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடந்த பிப். 26-ஆம் தேதி முதல் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தததை அடுத்து, சேலம் மாவட்டத்தில் அதிகாரிகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட வேண்டுமென மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சி.அ.ராமன் உத்தரவிட்டுள்ளாா்.
இதையடுத்து, பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது. தற்போது முதல்கட்டமாக 11 இடங்களில் தற்காலிகச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் திங்கள்கிழமை காலை சேலம், சூரமங்கலம் பகுதியில் உள்ள கந்தம்பட்டி பாலத்தில் சேலம் பறக்கும் படை குழுவைச் சாா்ந்த பிரபாகரன், மேற்கு வட்ட அலுவலக அதிகாரிகள் கண்காணித்தனா்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த தளவாய்பட்டியைச் சோ்ந்த ஏழுமலை என்பவரை நிறுத்தி சோதனை செய்தனா். இதில் வெள்ளிக் கொலுசு தயாரிக்கப் பயன்படும் 4 கிலோ 80 கிராம் வெள்ளிக் கம்பிகளை அவா் எடுத்துச் சென்றதும், அதற்கு உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த வெள்ளிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் மதிப்பு ரூ. 3.24 லட்சமாகும். பறிமுதல் செய்த வெள்ளிப் பொருள்கள் மேற்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.