சேலம் மாவட்டம் வாழப்பாடியில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்த நாள் விழா மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் நெஸ்ட் அறக்கட்டளை சார்பில், பேருந்து நிலையம் அருகே அப்துல்கலாம் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள், பூச்செடிகள் நடப்பட்டது.
இவ்விழாவிற்கு, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வி.சி. பாண்டியன் தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியை சத்தியகுமாரி வரவேற்றார். வாழப்பாடி ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.சி .சக்கரவர்த்தி, நகர செயலாளர் பி.சி.செல்வம் ஆகியோர், மரக்கன்றுகள் நிகழ்வை தொடங்கி வைத்தனர்.
நெஸ்ட் அறக்கட்டளை நிர்வாகிகள் பெரியார்மன்னன், ஜவஹர், ஆண்கள் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கலைஞர்புகழ், தொடக்கப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் எஸ்.காமராஜ், டாக்டர் ராமசாமி, இளங்கோ, பிரசாந்த், தினேஷ்குமார், சேட்டு, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.