காவிரி கரையோர மக்களுக்கு மேட்டூர் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 22 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 119.40 அடியாக உயர்ந்துள்ளது. அதிக நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க- தில்லியில் காற்று மாசு: ஒரு வாரத்திற்கு மூடப்படும் பள்ளிகள்
மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியவுடன் அணைக்கு வரும் உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் என்பதால் மேட்டூர் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் காவிரி கரையோரம் உள்ள 11 மாவட்ட ஆட்சியர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நாளை அதிகாலை முதல் காவிரி ஆற்றில் உபரிநீர் அதிக அளவில் திறக்க வாய்ப்பு உள்ளதால் காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்புக்காக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.