சிறுவனுக்கு விஷ ஊசி போட்டு கொன்ற வழக்கில் தந்தை உள்பட மூவர் கைது

கொங்கணாபுரம் அருகே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த சிறுவனுக்கு, விஷ ஊசி போட்டுக் கொலை செய்த வழக்கில் அச்சிறுவனின் தந்தை உள்ளிட்ட மூவரை காவலர்கள் கைது செய்துள்ளனர். 
சிறுவனுக்கு விஷ ஊசி போட்டு கொன்ற வழக்கில் தந்தை உள்பட மூவர் கைது
சிறுவனுக்கு விஷ ஊசி போட்டு கொன்ற வழக்கில் தந்தை உள்பட மூவர் கைது

எடப்பாடி:  கொங்கணாபுரம் அருகே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த சிறுவனுக்கு, விஷ ஊசி போட்டுக் கொலை செய்த வழக்கில் அச்சிறுவனின் தந்தை உள்ளிட்ட மூவரை காவலர்கள் கைது செய்துள்ளனர். 

சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட, கச்சுப்பள்ளி ஊராட்சி, இங்குள்ள குடைக்காரன் வளவு பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி, இவரது மனைவி சசிகலா இத்தம்பதிகளுக்கு செந்தமிழ் (18), வண்ணத்தமிழ் (14)  என இரு மகன்கள் உள்ளனர். இளைய மகன் வண்ணத்தமிழ் அங்குள்ள அரசு பள்ளியில் பயின்று வந்துள்ளார். 

இந்நிலையில் கடந்த ஆண்டு வண்ணத்தமிழ் சைக்கிள் ஓட்டி பழகி வந்த போது, தவறி விழுந்ததில் காலில்  காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. லாரி ஓட்டுனர் பெரியசாமி தனது மகனுக்கு ஏற்பட்ட காயத்திற்கு பல்வேறு இடங்களில் சிகிச்சை செய்து வந்துள்ளார். தொடர்ந்து அவரது கால் மோசமடைந்த நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் காலில் புற்றுநோய் ஏற்பட்டு அது மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக தெரிவித்தனர். கடந்த ஓராண்டு காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வண்ணத்தமிழ், நோயின் தாக்கத்தால் உடல் மெலிந்து மிகுந்த அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து மகனுக்கு உயர் சிகிச்சை அளிக்க போதிய பணம் இல்லாமல் திண்டாடி வந்த பெரியசாமி, அவனை கருணை கொலை செய்வது என்ற முடிவுக்கு வந்துள்ளார். இதனையடுத்து அவர் கொங்கணாபுரம் - சங்ககிரி பிரதான சாலையில், ரத்த பரிசோதனை கூடம் வைத்து நடத்தி வரும்  கன்னந்தேரி அருகில் உள்ள கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (39) என்பவரை அணுகி தனது கஷ்டமான சூழ்நிலை குறித்தும் தன் மகனை கருணை கொலை செய்திட உதவிடுமாறும் கெஞ்சியுள்ளார். 

பெரியசாமிக்கு உதவுவதாக வாக்குறுதி அளித்த வெங்கடேசன் அவருக்கு ஏற்கனவே பழக்கப்பட்ட எடப்பாடி அருகே உள்ள குரும்பபட்டி கிராமத்தைச் சேர்ந்த பிரபு என்பவரை அணுகி உள்ளார். மருத்துவ உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ள பிரபுவும் இதற்கு சம்மதித்துள்ளார்.

இந்நிலையில் ஞாயிறு  அன்று மாலை  பெரியசாமியின் வீட்டுக்குச் சென்ற மருத்துவ உதவியாளர் பிரபு, அங்கு கட்டிலில் படுத்து இருந்த சிறுவன் வண்ணத் தமிழுக்கு சிகிச்சை அளிக்க வந்த மருத்துவரை போல், பரிசோதனை மேற்கொண்டு சிறுவனுக்கு ஊசியும் போட்டுள்ளார். ஊசி போட்ட சில நிமிடத்தில் சிறுவன் துடிதுடித்து இறந்ததாக கூறப்படுகிறது. சிகிச்சையில் இருந்த சிறுவன் திடீரென இறந்து போன செய்தியை அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகத்தை எழுப்பவே, அப்பகுதி பொதுமக்கள் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். 

தகவலறிந்து நிகழ்விடம் வந்த கொங்கணாபுரம் காவலர்கள், சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சிறுவனின் தந்தை பெரியசாமி மற்றும் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவ உதவியாளர் பிரபு, ரத்தப் பரிசோதனை கூடம் நடத்திவந்த வெங்கடேசன் ஆகியோரிடம் காவலர்கள் தொடர் விசாரணை மேற்கொண்டதில், ஊசி போட்ட சில நிமிடத்திலேயே சிறுவன் உயிரிழந்த உண்மை தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்த காவலர்கள் அவர்களை கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com