வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்ப்பால் வார விழா மற்றும் ஊட்டச்சத்து கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவிற்கு, வட்டார மருத்துவ அலுவலர் சி. பொன்னம்பலம் தலைமை வகித்து விழாவை தொடங்கி வைத்தார். வாழப்பாடி அரிமா சங்கத் தலைவர், சித்த மருத்துவர் செந்தில்குமார், அன்னை அரிமா சங்கத் தலைவர் ஆசிரியை ஷபிராபானு ஆகியோர் கர்ப்பிணி தாய்மார்களுக்கு தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்த துண்டு பிரசுரங்கள், ஊட்டச்சத்து உணவு பொருட்கள் வழங்கினர்.
மருத்துவர் திவ்யபாரதி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மேற்பார்வையாளர் பத்மா, ஒருங்கிணைப்பாளர் கீர்த்திகாதேவி ஆகியோர், தாய்ப்பாலின் முக்கியத்துவம் மற்றும் ஊட்டச்சத்து உணவு முறைகள் குறித்து விழிப்புணர்வு கருத்துரை வழங்கினர்.
இந்த விழாவில், பேளூர் சித்த மருத்துவர் லட்சுமணன், வாழப்பாடி அரிமா சங்க பொருளாளர் முருகன், அன்னை அரிமா சங்க நிர்வாகிகள் பவித்ரா, சுதா பிரபு, சாந்தமீனா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில், பேளூர் பகுதியில் குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இயங்கும் அங்கன்வாடி பணியாளர்களின் சார்பில், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து கண்காட்சி நடைபெற்றது.
இதில் உணவு தானியங்கள், காய்கறிகள், கீரைகள் காட்சிப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட தாய்மார்களுக்கு தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை பகுதி சுகாதார செவிலியர் மணிமாலா, செவிலியர்கள் அனுராதா, கலைச்செல்வி ஆகியோர் செய்திருந்தனர் நிறைவாக, கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தாய்ப்பால் புகட்டல் குறித்த உறுதிமொழி ஏற்றனர். மருத்துவமல்லா சுகாதார மேற்பார்வையாளர் சண்முகம் நன்றி கூறினார்.